”கருத்துக்கணிப்புகள் ஆளும்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் வெளிப்பாடே இன்று காலை அனைத்து பத்திரிகைகளிலும் முதல்பக்கத்தில் விளம்பரத்தை கொடுத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி அதிமுக. அப்படி எங்கள் மீது தவறு இருந்திருந்தால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.” என்று சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கூறியுள்ளார்.


திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘’ரவீந்தரநாத்திற்கு இன்று டாடி ஓ.பன்னீர் செல்வம் அல்ல. மோடிதான் அவரின் டாடி. அ.தி.மு.க ஆட்சியின் 10 ஆண்டுகளில் நடந்த கொடுமைகளை எல்லாம் மக்கள் மறந்துவிடவில்லை. தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்றது அ.தி.மு.க காவல்துறை.


மேலும் இன்றைக்கு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்தது அதிமுக அரசின் முக்கிய பதவியில் உள்ள முக்கிய பிரமுகர் தொடர்புடைய நபர்கள். காவல்துறையில் இருக்கும் எஸ்.பிக்கே பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது அதிமுக அரசின் சிறப்பு டி.ஜி.பி.
பல அவலங்களை மூடி மறைத்துவிட்டு இன்றைக்கு முதல்பக்க விளம்பரம் கொடுத்துள்ளனர். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீங்கள் பொய்யான செய்தியை முதல்பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை திசை திருப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள்.


உதயநிதி ஸ்டாலினுக்காக நான் வாக்கு சேகரிக்கும்போது, எனக்கு பழைய நினைவுகள் வருகிறது. நான் முதன்முதலாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும்போது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் ஊரெல்லாம் ஓட்டு கேக்குற உன் பிள்ளைக்காக ஓட்டு கேக்க மாட்டியான்னு மக்கள் கேப்பாங்கன்னு நான் வந்தேன் என்று கருணாநிதி சொன்னார். அதுபோல, உதயநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். கருணாநிதி இந்தத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். அன்பழகன் வெற்றி பெற்ற தொகுதி. உதயநிதியை வெற்றி பெற வைப்பீர்களா? என்றார்.