நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலசார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பியுள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதில், "19-3-2020 என்ற எண்ணிடப்பட்ட கடிதத்தை உங்கள் அமைச்சகத்திலிருந்து வரப்பெற்றுள்ளேன். அது இந்தியில் உள்ளது. நல் வாய்ப்பாக கடித எண்ணை மட்டுமாவது தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கடிதத்தின் உள்ளடக்கம் என்னவென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அக்கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கில படிவத்தின் மூலம் அக்கடிதம் காந்தி சமாதான விருதுக்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கேட்கிற கடிதம் என்று அனுமானிக்க முடிகிறது.


தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது, அவ்வாறு அமைவது அலுவல் மொழிச் சட்டத்திற்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும் புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன்.


இப்பிரச்சினையில் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையைக்கூட அணுகினேன். அவ்வழக்கில் மத்திய அரசு வருத்தத்தை தெரிவித்து, இனி தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என்ற உறுதி மொழியையும் அளித்தது.


கடந்த காலங்களில் இந்தி கடிதங்களை மற்ற அமைச்சகங்களில் இருந்து வரப்பெற்றேன். இது கலாசார அமைச்சகத்தின் முறை போல. கலாசார அமைச்சகத்தின் அதிகாரிகளாவது இம் மாபெரும் தேசத்தின் பன்மைத்துவ கலாசார, பன்மொழி மரபு வழியினை உள் வாங்கியவர்களாக இருந்திருக்க வேண்டும்.
மத்திய அரசின் இந்த அணுகுமுறை திட்டமிடப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சமஸ்கிருதத்தையும், இந்தியையும், அம்மொழிகளை பேசாத மாநிலங்கள் மீது, குறிப்பாக தமிழக மக்கள் மீது திணிப்பதற்கான விரிந்த திட்டமா இது?


இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப் போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக் கூடும்.
ஆனால், அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடிய, பல தியாகங்களையும் புரிந்த தனித்துவம் மிக்க வரலாறைக் கொண்டது. ஆகவே நாங்கள் களைத்துப் போய் விட மாட்டோம்.


எங்கள் அடையாளத்தை பெருமை மிகு கலாசாரத்தை பலவீனமுறச் செய்யும் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம்.


உங்கள் அமைச்சக அதிகாரிகள் இந்நாட்டின் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். அரசாங்கம் நீதிமன்றத்தின் முன்பு அளித்த உறுதி மொழியை மீறியிருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
ஆகவே, உங்கள் இந்திக் கடிதத்தை உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன். உங்கள் அமைச்சகம் இப்படி ஆத்திரமூட்டுகிற நடவடிக்கைகளில் எதிர் காலத்தில் ஈடுபடக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.