“பாஜகவை விரட்டும் போரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்” என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆவேசமாக பேசி உள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆளும் கட்சியாகவும், அதிமுக எதிர் கட்சியாகவும் இருந்து வருகிறது. என்றாலும், பாஜக தலைவர் அண்ணாமலை “தமிழகத்தில் பாஜகதான் எதிர் கட்சி போல் செயல்பட்டு வருவதாகவும்” தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, மதுரை பழங்காநத்தம் என்னும் பகுதியில் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது மாநில மாநாட்டு நடைபெற்றது.

திறந்த வெளி மேடையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் பொது கூட்டத்தில், அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன் கலந்துகொண்டு, பேசினார். 

அந்த பொது கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன், “பாஜக அரசு மதச்சார்பின்மையை சீர் குலைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“இதற்கு சில நீதிபதிகளும் துணை போகிறார்கள் என்றும், பாஜக அரசுக்கு வக்காலத்து வாங்கும் நீதிமன்றங்களையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்” என்றும், அவர் அனல் பறக்க பேசினார்.

அத்துடன், “தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன என்றும், அந்த சட்டத்திற்கு ஆபத்து ஏற்படும் வகையில் தீர்ப்பு வரலாம்” என்றும், அவர் முன்கூட்டியே குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுகிறேன்” என்று, ஆவேசம் பொங்க பேசினார். 

“தமிழகத்தில் மத பதட்டத்தை ஏற்படுத்தும் செயல்களை செய்தால், உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்” என்றும், அவர் சூளுரைத்தார்.

“தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் எங்கே இருந்தாலும், நாங்களும் அங்கே செல்வோம் என்றும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு ஓநாய் கூட்டம் என்றும், அதன் குகைக்குள் நாங்கள் செல்வோம்” என்றும், அவர் மிக கடுமையாக விமர்சனம் செய்தார். 

மேலும், “மதச்சார்பின்மையை குலைக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் செய்யும் எல்லா செயல்களையும் நாங்கள் அதிரடியாக தடுத்து நிறுத்துவோம்” என்றும், அவர் ஆவேசம் பொங்க பேசினார்.

“தமிழகத்தின் கோயில்கள் இறை நம்பிக்கை வாழ்கிற இடம் என்றும், அங்கு மதம் கிடையாது என்றும், இதனால் தமிழக கோயில் கமிட்டிகளில் மட்டுமல்ல, கோயில் நிகழ்வுகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பண்பாடு, கலாச்சார பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இனி தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றும், அவர் சூளுரைத்தார்.

அதே நேரத்தில் “கோயில்களில் அபிஷேகம் செய்ய மாட்டோம் என்றும், ஆனால் தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்வோம்” என்றும், அவர் விளக்கமாகவே எடுத்துரைத்தார்.

முக்கியமாக, “தமிழ்நாட்டிலிருந்து பாஜகவை விரட்டும் போரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்” என்றும், அவர் ஆவேசமாக சூளுரைத்தார். 

குறிப்பாக, “கோயில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மிரட்டல் வர தொடங்கி உள்ளது என்றும், இதனை நியாயப்படுத்தி முதல்வர் பேசக்கூடாது” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

“நீட் தேர்வு விதிவிலக்கிற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், அது போல நீர்நிலைகளில் வசிப்பவர்களையும், கோயில் இடங்களில் வசிப்பவர்களையும் பாதுகாக்க புதிய கொள்கையை உருவாக்க வேண்டும்” என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன், பேசினார்.

தற்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களுக்கு எதிராக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன் ஆவேசம் மிக்க பேச்சு, தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.