முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பின்பு, முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்று ஆ.ராசா தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆ.ராசா பேசியதற்கு இன்றைக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் தான் எதுவும் பேசவில்லை என தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா கடிதம் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அக்கடிதத்தில், ‘’உவமானம் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டுப் பேசினேன். முதல்வர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாகத் திரித்து வெளியிடப்பட்டது தெரியும். 

மேலும், “அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாகப் பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாகத் தெரிவியுங்கள்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.