அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில், “அரசியல் பழிவாங்குவதை திமுக நிறுத்த வேண்டும்” என்று, இபிஎஸ் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
 
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழுப்புத்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதாவது, அதிமுக ஆட்சிகாலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்த காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

முக்கியமாக, அதிமுக ஆட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், காமராஜ் தனது பதவியை தவறாக பயன்படுத்தி பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்தார் என்றும், இதன் மூலமாக வருமானத்திற்கு அதிகமாக அவர் அசையும் மற்றும் அசயா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் சுமார் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 752 ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்து உள்ளன.

இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் வழக்கும் முன்னதாக பதிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர் என 49 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றன. 

முன்னாள்  அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வரும் நிலையில், தற்போது வருமான வரித்துறையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்பட 6 பேர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்கின் அடிப்படையில் தான், சென்னையில் மட்டும் சுமார் 6 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வளவு பணம், பத்தரங்கள் மற்றும் எந்த மாதிரியான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன உள்ளிட்ட எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், கேபி அன்பழகன் உள்ளிட்ட பலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி உள்ளது. 

அந்த வரிசையில் தான், தற்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டிலும், அவருக்கு சொந்தமான மற்ற இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

இதிலும் குறிப்பாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜூன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, மன்னார்குடியில் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பாக அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் குவிந்து உள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனைக்கு, எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 

மேலும், “அதிமுகவை அரசியல் ரீதியாக, நேரடியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப் பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.