சென்னையில் 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய இன்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இரவு நேரத்தில் பணியாற்றி வந்துள்ளார் ராஜ் செழியன் என்கிற பிரதீப். இவரது மனைவி பகலில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு தான் வீடு திரும்புவார். பகலில் தனிமையிலிருந்த பிரதீப், பொழுது போக்காகப் பெண்களின் தொலைப்பேசி எண்களை, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திலிருந்து சேகரிக்கத் தொடங்கினார். இதனையடுத்து, தன்னுடைய பெண் தோழி அர்ச்சனா ஜெகதீசின் உதவியுடன், வேலை தேடிக்கொண்டிருக்கும் அழகான பெண்களைக் குறிவைக்கத் தொடங்கினார்.
முதலில் தோழி அர்ச்சனா மூலம், வேலை தேடும் பெண்களிடம் போன் செய்து “பைவ் ஸ்டார் நட்சத்திர ஓட்டலில், முன் அறையில் அமர்ந்து பணிபுரிய அழகான பெண்கள் தேவைப்படுகிறார்கள். லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். நீங்கள் அந்த வேலைக்கு வர விரும்புகிறீர்களா?” என்று பேசுவார். அதற்கு ஓகே சொல்லும் பெண்களிடம், அடுத்த சுற்று இன்டர்வியூ போல் பிரதீப் மற்றொரு தொலைப்பேசியில் இருந்து பேசுவார். இன்டர்வியூ செய்வது போல, பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்டு அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வார்.
அதன்பிறகு, அவர்களிடம் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பு கொண்டு, “பைவ் ஸ்டார் நட்சத்திர ஓட்டலில், முன் அறையில் அமர்ந்து பணிபுரிய வேண்டும் என்பதால், அழகான உடல் அமைப்புடன் இருக்க வேண்டும் என்று கூறி, உங்களுக்கு அத்தகைய உடல் அமைப்பு இருக்கிறதா? என்பதை அறிய நிர்வாண படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்புங்கள் என்று சொல்லுவார். பிரதீப்பின் இந்த வக்கிர புத்தியைப் பற்றித் தெரியாத பல பெண்களும், தங்களது நிர்வாண படத்தை அனுப்பி வைத்துள்ளனர். அந்த நிர்வாண படங்களை ரசித்துப் பார்த்து விட்டு, மீண்டும் அவர்களுடன் வீடியோ காலில் பேசுவார்.
அப்போது, உங்களை “பைவ் ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் முன் அறை பணிக்குத் தேர்வு செய்து இருக்கிறோம்” என்று கூறுவார். அதில், மகிழ்ச்சி அடைந்து உடனே வேலைக்கு வர தயாராகும் பெண்களிடம், “உங்களது உடல் அமைப்பு மிக முக்கியம். அதனால், ஆடைகளைக் களைந்து காட்டுங்கள்” என்று கேட்பாராம். அதையும் ஏற்று சில பெண்கள் அப்படியே செய்துள்ளனர். அப்படி, ஆடைகளைக் களைந்து காட்டிய பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் அவர் ரகசியமாக வீடியோ எடுத்துச் சேகரித்து வைத்துள்ளார். பின்பு, ஒவ்வொருவருக்காக போன் செய்து, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இப்படி 16 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 600 பெண்கள் இரவது வலையில் விழுந்ததாகத் தெரிகிறது.
இறுதியாக, ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமும் பிரதீப், இன்டர்வியூ எடுப்பதுபோல், அவரின் ஆபாச புகைப்படத்தைக் கேட்டுள்ளார். அப்போது, அவருக்குச் சந்தேகம் வரவே, பிரதீப்பின் நிறுவனம் குறித்து இணையத்தளத்தில் தேடியுள்ளார். அப்போது, இது போலியான நிறுவனம் என்பதை கண்டுபிடித்து, ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, ஐதராபாத் போலீசார் சென்னை வந்து பிரதீப்பை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், பிரதீப்பிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் தான், இவ்வளவு உண்மைகளும் தெரியவந்துள்ளது.