முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாதி ரீதியாக அவதூறு கருத்தை கூறியதால், தொடரப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், நேரலை நிகழ்வு ஒன்றில் மற்றொரு வீரரை குறிப்பிடும் போது, சாதி ரீதியாக சில வார்த்தைகளை கூறியிருந்தாக கூறப்படுகிறது.

யுவராஜ் சிங்கின் இந்த சர்ச்சை பேச்சானது, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவியது. 

அதாவது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உடன், யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவில் கலந்துரையாடினார். 

அப்போது, இந்திய அணியின் சக சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து, யுவராஜ் சிங் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்திருந்தார். 

அதில், சாஹலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, இதற்கு மிக கடுமையான கண்டன குரல்களும் எழுந்தன.

குறிப்பாக யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட ஒஐ சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக, அப்போது சர்ச்சை வெடித்தது. 

யுவராஜ் சிங்கின் இந்த சர்ச்சைக்குறிய பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பும் அப்போது எழுந்தது. 

இது தொடர்பாக ஜான்சியில் புகார் அளிக்கப்பட்டது. இது, ஊடகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது.

இதனையடுத்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய யுவராஜ் சிங், “தவறுதலாக அப்படி ஒரு கருத்தை கூறி விட்டதாக” அவர் விளக்கமும்  அளித்து இருந்தார்.

ஆனால், “சாதி வன்மத்துடன் கருத்துக்களை கூறியதாக யுவராஜ் சிங்கிற்கு எதிராக புகார்” அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஹன்சி காவல் நிலையத்தில் யுவராஜ் சிங் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.  

அதுவும், வழக்கறிஞர் ராஜட் கல்சான் என்பவரின் சட்ட போராட்டத்தால் இந்த வழக்கில், ஹரியானா மாநிலம் ஹன்சி காவல் துறையினர் தற்போது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, யுவராஜ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட யுவராஜ் சிங்கிடம் போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

அப்போது, “நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக நான் அப்போதே மன்னிப்பு கேட்டு விட்டதாகவும்” யுவராஜ் சிங், அதிகாரிகளிடம் விளக்கம் அளித்திருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இடைக்கால பிணை பெற்றதால், யுவராஜ் சிங் உடனடியாக விடுவிக்கப்பட்டார். 

யுவராஜ் சிங் கைது செய்யப்பட்ட விவகாரம், அவரது ரசிர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்த விவகாரம், கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.