இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழ்நாட்டுக்குள் தேச விரோத சக்திகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனைத்தொடர்ந்து இந்தியா கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசின் வர்த்தக கழகத்திற்கு அரிசி அனுப்பி வைக்கும், பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.வி.கிருஷ்ண ராவ் இது குறித்துப் பேசுகையில், “நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வெகு எளிதாக மாற்றம் செய்யக் கூடிய கண்டெய்னர்களில் முதலில் அரிசியை நிரப்பி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில், இலங்கைக்கு வெகு விரைவாக அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்றும், பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் வாரக் கணக்கில் ஆகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதனை தொடர்ந்து திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் மகிந்த ராஜபக்சேவின் இல்லம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளும் கட்சியினர் மீது எதிர்கட்சி மற்றும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இலங்கையில் இதனால் வடரெக்க சிறைச்சாலையின் புனர்வாழ்வு முகாமிற்கு கைதிகளை ஏற்றி சென்ற பேருந்து மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 சிறைச்சாலை அதிகாரிகள், 10 கைதிகள் காயமடைந்தனர்.  அத்துடன் பேருந்தில் பயணம் செய்த 58 கைதிகள் தப்பி ஓடியதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதனைத்தொடர்ந்து தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழககாவல்துறை, பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்,  இலங்கையில் இருந்து தப்பிய 58 கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது , விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப்பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது. இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.