கரும் பூஞ்சையைத் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை பாதிப்பு இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளதால், அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற அச்சம் மருத்துவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் தொற்றிக்கொண்டு உள்ளது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பலருக்கும் கரும் பூஞ்சை நோய் பாதிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், பலரும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முக்கியமாக, பீகார், ராஜஸ்தான், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த கரும் பூஞ்சை நோய் அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது 
தமிழகத்திலும் இந்த கரும் பூஞ்சை நோய் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. “இந்த கரும் பூஞ்சைத் தொற்றை பெருந்தொற்று நோயாக அறிவிக்க வேண்டும்” என்று, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இப்படியான நிலையில், தமிழ்நாட்டில் கரும் பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நோயைத் தொற்று நோயாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அத்துடன், கரும் பூஞ்சை பாதிப்பைத் தொற்று நோயாக மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து, தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. 

இதன்மூலமாக, கரும் பூஞ்சையை நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை அனைத்து மருத்துவமனைகளும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்து உள்ளது.

மேலும், “சர்க்கரை நோயாளிகள் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த கரும் பூஞ்சை தாக்குவதாக” மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவற்றுடன், “கடுமையான தலைவலி, காய்ச்சல், கண் சிவத்தல், ரத்த வாந்தி, பார்வை குறைபாடு, மூக்கடைப்பு, மூக்கில் இருந்து ரத்த கலந்த நீர் வடிதல்” உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதில், ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கரும் பூஞ்சை நோய் பரவத் தொடங்கியிருக்கும் இப்படியான சூழ்நிலையில், பீகாரின் பாட்னா மருத்துவமனையில் வெள்ளை பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இது குறித்து பேசிய அங்குள்ள மருத்துவமனையின் மைக்ரோபயோலஜி துறை தலைவர் டாக்டர் எஸ்.என்.சிங், “பாட்னா மருத்துவமனையில் இது வரை 4 பேருக்கு வெள்ளை பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும், அந்த 4 பேரும் பூஞ்சை தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுக் குணமடைந்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.

“இவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன என்றும், ஆனால் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது” என்றும், அவர் கூறினார்.

“இந்த வெள்ளை பூஞ்சை, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், இது தவிர தோல், நகங்கள், வாயின் உட்புற பகுதி, வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள், மூளை உள்ளிட்ட பாகங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்” மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், “கரும் பூஞ்சையை விட, புதிதாகப் பரவத் தொடங்கியிருக்கும் வெள்ளை பூஞ்சை நோய் மிகவும் ஆபத்தானது” என்றும், மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.