லட்சத்தீவை நிர்வகித்து வரும் பிரஃபுல் படேலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை, இந்தியா முழுவதும் ஒருமித்த குரலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளதற்கு மிக முக்கியமான காரணங்கள் வெளியாகி உள்ன.

கேரளா கடற்கரையில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தில் அரபிக் கடலில் பகுதியில் அமைந்திருக்கிறது லட்சத்தீவு. 

இந்தியாவின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான இந்த லட்டசத்தீவில், சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே வாழ்ந்த வருகின்றனர். அங்கு வாழும் பெரும்பாலான மக்கள், பல குடிகளாகவே உள்ளனர்.

இந்த லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த தினேஷ்வர் சர்மா என்பவர், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இதனையடுத்து, டாமன் - டையூ நிர்வாகத்தை கவனித்து வந்த பிரஃபுல் படேல் என்பவர், இந்த லட்சத்திவுக்கு பொறுப்பு நிர்வாகியாக பாஜக தலைமையிலான மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

இதில், கவனிக்கத் தகுந்த விசயம் என்னவென்றால், “இது வரை லட்சத்தீவில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளாக நியமித்து வந்த மத்திய அரசு, தினேஷ்வர் சர்மா மறைவிற்குப் பிறகு, அங்கு முதன் முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு. இங்கு தான் பிரச்சனையே உருவெடுத்தது.

அதாவது, குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல் என்பவர், பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்டராக வலம் வந்தார். இந்த அரசியல்வாதியைத் தான், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிப்பதற்குப் பதிலாக, பாஜக தலைமையிலான மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

இப்படி, அரசியல்வாதியாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா பட்டேல் தான், லட்சத்தீவில் தற்போது நிலவும் ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முக்கியமாக, லட்சத்தீவுகளின் முந்தைய நிலவுரிமை சட்டப்படி, லட்சத்தீவை பூர்வீகமாகக் கொண்ட தாய், தந்தையருக்குப் பிறந்தவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்கிற விதி உள்ளது. அந்த விதிகள் தளர்த்தப்பட்டு, தற்போது யார் வேண்டுமானாலும் இங்கு இடம் வாங்க வழிவகை செய்யும் பிரஃபுல் படேலின் புது உத்தரவு அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. 

அத்துடன், அங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்த லட்சத்தீவில், மாட்டிறைச்சிக்குத் தடை விதித்ததோடு, மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்தும் 
பாஜக தலைமையிலான மத்திய அரசு நியமனம் செய்யப்பட்ட அந்த அரசியல்வாதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், லட்சத்தீவில் உள்ள கடலோர மக்களின் குடில்களை அகற்ற அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு லட்சத்தீவு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இவற்றுடன், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் தேர்தலில் நிற்கும் தகுதி இல்லை என்ற சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சதி செய்வதாகவும் மிக கடுமையான விமர்சனங்கள் எழுந்து உள்ளன.

இதன் காரணமாக, #saveLakshadweep என்கிற ஹேஷ்டேக், தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

கேரள எழுத்தாளர்கள், நடிகர்கள் மட்டுமின்றி பொது மக்களும் இது குறித்து மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

“லட்சத்தீவு மக்கள் பாஜகவின் புதிய அதிகாரியால் மகிழ்ச்சியாக இல்லை” என்றும், பிரபல மலையாள நடிகர் பிருத்திவிராஜ் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மிக முக்கியமாக, “லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேலை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், மக்களின் உணர்வுகளை முழுமையாக மதிப்பதற்குக் குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் தயாராக இருக்க வேண்டும்” என்றும், கேரளா அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே, “லட்சத்தீவில் இருந்து வரும் செய்திகள் மிகவும் தீவிரமானவை” என்று, தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரம் மீது சுமத்தப்பட்ட சவால்களை ஏற்க முடியாது” தனது கண்டனத்தைப் பதிவு 
செய்துள்ளார்.