விமானத்திலிருந்து இறங்க விடாமல் 5 மணி நேரம் உள்ளேயே காக்க வைத்ததாக இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளார்.

roja

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏவாக இருக்கும் ரோஜா விமானத்தில் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதிக்கு பயணம் செய்துள்ளார். அவருடன் சுமார் 70 பயணிகள் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர்.

திருப்பதி விமான நிலையத்தை அடைந்தபோது விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் சூழல் உருவானதால் விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தை பெங்களுருவை நோக்கித் திருப்பி பெங்களூரில் தரையிறக்கியுள்ளார். இது குறித்து வீடியோ வெளியிட்ட ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற விமானத்தில் பயணித்தேன். தரையிறங்கும் சமயத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக அறிவித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெங்களூருக்கு வந்து சேர்ந்த விமானத்தில் இருந்து நாங்கள் இறங்கி செல்ல வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறினோம். பெங்களூரு விமான நிலையத்திற்குச் சென்ற விமானத்திலிருந்து பயணிகளை கிட்டத்தட்ட 5 மணிநேரம் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறினார். இது குறித்துப் பேசியுள்ள ரோஜா நாங்கள் சுமார் 5 மணி நேரமாக விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்கிறோம். எங்களை வெளியே செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள். சமீபத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக விமானத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் வலி அதிகமாக உள்ளதாகக் கூறி வெளியே செல்ல அனுமதி கேட்டும் மறுத்தனர்.

மேலும் விமானத்தில் இருந்து வெளியே செல்ல தலா 5 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் மட்டுமே விமானத்திலிருந்து இறங்கி செல்ல அனுமதிப்போம் என்று கூறிவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாங்கள் கூறி விட்டோம்.மேலும் கதவுகளை திறக்க எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று விமானத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் கூறினர். இதனால் நாங்கள் நீண்ட நேரம் விமானத்திற்கு உள்ளேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விஷயத்தை தான் சும்மா விடப்போவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் பெங்களூரு திரும்பிய நிலையில் பயணிகளிடம் பணம் கேட்டதாக நடிகை ரோஜா புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.