இயற்கை விவசாயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

குஜராத்தில் வேளாண் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“இன்றைய நிகழ்ச்சியில் 8 கோடி விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு மூலம் கிடைக்கும் பலன்கள், குஜராத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும். 

உணவு பதப்படுத்துதல், இயற்கை விவசாயம் ஆகியவை விவசாய துறையை மாற்றியமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். விவசாயத்தை வேதியியல் ஆய்வகத்தில் இருந்து அகற்றி, இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டும். 

இயற்கை ஆய்வகம் குறித்து பேசும் போது, அது முற்றிலும் அறிவியல் சாய்ந்தது. விதை முதல் மண் வரை அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வானது இயற்கை முறையில் கிடைக்க செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

modi natural farming

குறைந்த பட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மூலம் மட்டுமே அதிக பயிர்களை நடவு செய்ய முடியும். அடிப்படைக்கு திரும்புவோம் என்ற கொள்கையை உலக நாடுகள் பின்பற்ற துவங்கி உள்ளன. 

இயற்கை வேளாண்மை மூலம் வருமானம் பெருகும். நமது உற்பத்தி திறனை அதிகரிக்க செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இயற்கை விவசாயம் நாட்டில் உள்ள 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். 

modi natural farming

சிறு விவசாயிகள் அதிகளவு ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை உரத்தை பயன்படுத்தினால் அவர்களுக்கு பலன் கிடைக்கும். விவசாய தொழில்நுட்பங்களில் தவறுகளை அகற்ற வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பதால் நிலத்தின் உற்பத்தி திறன் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆனால் வேளாண் கழிவுகளை எரிப்பது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, வேளாண்மையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். குஜராத் அரசின் வேளாண் திட்டங்கள் நாட்டிற்கே வழிகாட்டுகின்றன. 

தமிழ்நாட்டின் திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மண் வளம் பாதுகாப்பு பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டில், உலகை இந்தியா வழிநடத்தப் போகிறது. 

இந்திய விவசாயிகள்தான் வழிநடத்தப் போகிறோம். நமது  சுதந்திர தினத்தின் 100-வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது, இயற்கை விவசாயத்தின் மூலம் இயற்கையுடன் இணைந்து, உணவுப் பாதுகாப்பிற்கான சிறந்த தீர்வை உலகிற்கு இந்தியா வழங்கும்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.