“பாலியல் தொழிலும் புரொஃபஷனலான ஒரு தொழில் முறை தான் என்றும், இதில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்றும், உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது, பெரும் வைரலாகி வருகிறது.

இது குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கில் பல முக்கிய உத்தரவுகளை இன்றைய தினம் பிறப்பித்து உள்ளது. 

இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் யாவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதன்படி, அந்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள அந்த உத்தரவில், “பாலியல் தொழிலும் ஒரு தொழிலே” என்று, குறிப்பிட்டனர். 

அத்துடன், “இந்த தொழிலை செய்வோருக்கும் சட்டத்தின் கீழ் சமமான மரியாதையும், பாதுகாப்பும் உண்டு என்றும், வயது வந்தோர் இருவர் அல்லது பாலியல் தொழிலாளியுடன் உவந்து உறவில் ஈடுபடுவோர் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்றும், அதிரடியாக உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

மேலும், “பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தின் பாதுகாப்பை பெற தகுதியானவர்கள் என்றும், இதனால் கிரிமினல் சட்டமானது எல்லோர் மீதும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டியது” என்றும், நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

“இதனால் வயது, பரஸ்பர சம்மதம், இது பாலியல் தொழிலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்” என்றும், நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டி உள்ளது. 

“18 வயதுக்கு மேற்பட்ட 2 வளர்ந்த நபர்கள், பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் பாலியல் உறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என்றும், அவர்கள் மீது போலீஸ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது” என்றும், நீதிபதிகள் விளக்கமாக எடுத்துரைத்து உள்ளனர்.

“பாலியல் தொழில் கூடங்களை ரெய்டு செய்யும் போது, பாலியல் தொழிலாளிகளை கைது செய்வதோ, அபராதம் விதிப்பதோ அவர்களை துன்புறுத்தவோ கூடாது என்றும், தன்னார்வத்தில் செய்யும் பாலியல் தொழில் சட்ட விரோதம் அல்ல என்றும், ஆனால் பாலியல் கூடங்கள் நடத்துவது சட்ட விரோதம்” என்றும், நீதிபதிகள் அமர்வு புதிதாக விளக்கம் அளித்து உள்ளனர்.

முக்கியமாக, “ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தையை அவரிடமிருந்து பிரிக்கக் கூடாது என்றும், அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது, அதற்கு தகுந்த காரணம் அல்ல” என்றும், நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர். 

“மனிதர்களின் மாண்பைப் பாதுகாத்தல் என்பது, பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் பொருந்தும்” என்றும், நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.

'ஒரு குழந்தை, பாலியல் தொழிலாளியுடன் வாழ்ந்து வந்தால், அந்தக் குழந்தை கடத்தப்பட்ட குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை என்றும், ஒரு வேளை அதில் சந்தேகம் ஏற்பட்டால் குழந்தை, தாயின் மரபணுவை பரிசோதனை செய்து பார்க்கலாம்” என்றும், நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, “பாலியல் தொழிலாளி என்பதால், அவர் கொடுக்கும் பாலியல் பலாத்கார புகார்களை ஏற்கக் கூடாது என்பதில்லை என்றும், அவர்களுக்கும் மருத்துவ, சட்ட உதவிகளை வழங்க வேண்டும்” என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

“பாலியல் தொழிலாளிகள் மீதான காவல் துறையின் அணுகு முறை எப்போதுமே கடுமையானதாக இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது” என்றும், நீதிபதிகள் கவலைத் தெரிவித்து உள்ளனர். 

என்றாலும், “சில நேரங்களில் காவல் துறையே, அவர்களை வன்முறைக்கு உள்ளாக்குகிறது என்றும், இதில் காவல் துறையினருக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றும், நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

இதனிடையே, பாலியல் தொழிலாளிகளுக்கு ஆதரவாக, நீதிமன்றம் கூறியுள்ளது கருத்து, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.