இந்தியாவில் வயது வந்த ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது கருத்துக்களை இந்த உலகமே அறியும். ஆனாலும், மனிதனின் பரிணாம வளர்ச்சி இந்த பூமியில் தோன்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளதாகவும் பரவலாக கூறப்படுவதுண்டு.

அத்துடன், உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும், நிறத்திலும் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.

ஆனாலும், சூழ்நிலைக் காரணமாக மனிதர்களின் உயிரின வேறுபாடுகள் பல சிற்றினப் பரவல்களை ஏற்படுத்தின. இது காலத்திற்குக் காலம் மாறுபட்டுக்கொண்டே வந்தது. இதன் காரணமாக, பூமியன் முதல் மனிதன் தோன்றியது பற்றிய ஆராய்ச்சிகள், ஆதி மனிதன் பற்றிய ஆராய்ச்சிகளை, இந்த உலகம் இன்று வரை மேற்கொண்டு தான் வருகின்றன.

இந்த ஆராய்ச்சிகளில் பல புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் தான், தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தற்போது புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், “கடந்த 2005 - 06 ஆம் ஆண்டில் இருந்ததை விட 2015 - 16 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் வயது வந்த ஆண் மற்றும் பெண்களின் சராசரி உயரம் அப்படியே படிப்படியாகவே குறைந்து உள்ளதாக”  தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “பழங்குடியின பெண்களின் சராசரி உயரம் மற்ற பெண்களை விட குறைவாக உள்ளதாகவும்” அதில் கூறப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “26 வயது முதல் 50 வயது வரையிலான பிரிவில் பட்டியலின பெண்களின் சராசரி உயரம் 2005-06 இல் 150.66 சென்டி மீட்டராக இருந்த நிலையில், 2015-16 ஆம் ஆண்டில் 151.16 சென்டி மீட்டராக உயர்ந்து காணப்பட்டது” என்றும், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், “இதர பிற்படுத்தப்பட்ட பெண்களின் உயரம் 151.77 சென்டி மீட்டரில் இருந்து 152.01 ஆக அதிகரித்து உள்ளது என்றும், ஆனால் பழங்குடியின பெண்கள் உயரம் 151.27 சென்டி மீட்டரில் இருந்து 151.22 சென்டி மீட்டராக குறைந்திருந்தது என்றும், பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது பணக்கார பெண்களின் சராசரி உயரம் பிற பெண்களை விட அதிகமாக இருப்பதாகவும்” சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 

அத்துடன், “ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளும் இந்த உயர மாறுபாட்டிற்குக் காரணமாக இருக்கலாம்” என்றும், ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. 

“மனிதர்களின் உயரம் குறையும் போக்கானது, இந்திய அளவில் சரிந்து வந்தாலும் மற்ற உலக நாடுகளில் சற்று அதிகமாக இருப்பதாகவும்” டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பிரிவு கூறியுள்ளது.