பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார் என முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். அப்போது முதல்வர்களிடம், கடந்த 2 ஆண்டுகளில் இது நமது 24-வது கொரோனா வைரஸ் சந்திப்பாகும். மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்பட்ட விதம், கொரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. கோவிட்-19க்கு எதிரான போராட்டம் இன்னும் முடியவில்லை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என ஏழு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி இதன் தொடர்பாக பேசுகையில், கடந்த ஆண்டு நவம்பரில் எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்தது. இதனையடுத்து பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை.

மேலும் கூறிய அவர் நான் யாரையும் விமர்ச்சிக்கவில்லை. ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இப்போது வாட் வரியை குறைத்து மக்களுக்கு பலன்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். மோடி குறிப்பிட்ட 7 மாநிலங்களில் பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது என நேற்று பேசிய காணொளியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக அரசும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டசபையில்  இன்று பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை விளக்கம் கேட்டார். இதை தொடர்ந்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி கூட்டம் நடத்தினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகையை காணவில்லை என கருத்து தெரிவித்தார்.

மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைவுக்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், பெட்ரோல், டீசலுக்கு மாநில அரசு விதிக்கும் வரியை குறைக்காததால்தான் நாட்டில் விலையை குறைக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர் இதைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கருத்து தெரிவித்துள்ளார். 2014-ல் ஆட்சிக்கு வந்தபோது கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவில் சரிந்தாலும், அதற்கேற்றது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், அதன் உபரி வருவாய் முழுவதையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டுள்ளது.

அதாவது பெட்ரோல், டீசல் விலை மீது விதிக்கப்படும் கலால் வரியானது மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடியது என்ற காரணத்தால், அதை குறைத்து மாநில அரசுகள் வருவாயில் கை வைத்தது மத்திய அரசு. பிற வரிகளை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால், அதை கடுமையாக உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி அதில் கிடைக்கும் வருவாயை தனதாக்கி கொண்டது மத்திய அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பதற்காக விலையை குறைத்து மத்திய அரசு வேடம் போட்டது. மாநில அரசுகள் தேர்தல் முடிந்த பிறகு வேகமாக உயர்த்தியுள்ளது. ஆனால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, பெட்ரோல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைத்தது. இது அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரியும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.