ஓமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தார்.

omicron death

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,200-ஐ நெருங்கியுள்ளது.

இந்நிலையில் முதல் முறையாக இந்தியாவில் ஒருவர் ஒமைக்ரான் தொற்றால் உயிரிழப்பை சந்தித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் நபர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அந்த நபர் ஒய்.பி.சவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. அவரின் உடல் உபாதைகளை கருத்தில் கொண்டு இதனை நேரடி ஓமைக்ரான் மரணம் என அவர்கள் குறிப்பிடவில்லை.
நாட்டிலேயே அதிகளவு ஓமைக்ரான் தொற்று பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. அங்கு இதுவரை 450 பேருக்கு இந்த வகை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 46% சதவிகிதம் பேர் எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது.