பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த ரிடயட் ஆசிரியர் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் ஏழுந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் கே.வி.சசிகுமார். பள்ளி ஆசிரியரான இவர், மலப்புரம் நகராட்சியின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலராகவும் இருந்தார். சசிகுமார் 38 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் 31-ம் தேதி அன்று ஓய்வு பெற்றார். மார்ச் 31 அன்று பள்ளியின் சார்பில் அவருக்கு வழங்கிய ‘பிரமாண்டமான பிரியாவிடை’ குறித்து அவர் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டார். இதனை பார்த்த சசிகுமாரின் நண்பர்கள் அவருக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகுமாரின் முன்னாள் மாணவர் ஒருவர், அவரை பற்றி அதிர்ச்சி தகவல் ஒன்றை பேஸ்புக்கில் பதிவிட்டார். மஞ்சேரியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் குமார் என்பவர், ‘கே.வி.சசிகுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னிடம் பயின்ற மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக’ பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பினார். 

அதனைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் இந்த பதிவு வைரலாக பரவியது. இதனை பார்த்த பலரும் சசிகுமாரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். குறிப்பாக மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள், சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சசிகுமார் விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி கேரள கல்வி துறை மந்திரி சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தன்னிடம் படித்த மாணவிகள் பலரும் தனக்கு எதிராக புகார் தெரிவித்ததும், அதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததையும் அறிந்த சசிகுமார் தலைமறைவானார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முன்னாள் பள்ளி ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலருமான கே.வி.சிவகுமார் போக்சோ வழக்கில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்தார். அவரிடம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம்  கேரளாவில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.