எம்.பி. அதுல் ராய் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்த நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து சிகிச்சைப் பெற்று வந்த அந்த பெண், பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி  எம்.பி.யான அதுல் ராய் மீது, அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், எம்.பி.யை விசாரணைக்கு அழைத்த நிலையில், காவல் நிலையத்தில் சரண் அடைந்து அவர் விளக்கம் அளித்தார். 

இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி  எம்.பி.யான அதுல் ராயிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

ஆனால், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் எம்.பி. க்கு அதிக அளவிலான சலுகைகள் அளித்து வருவதாக செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட இளம் பெண், இது தொடர்பாக காவல் துறையின் உயர் அதிகாரிகளை சந்தித்து மீண்டும் இது குறித்து புகார் அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 16 ஆம் தேதி திடீரென டெல்லி உச்ச நீதிமன்றத்தின் வாயில் அருகே நின்று, தனது காதலன் உடன் அந்த பெண் திடீரென்று தீக்குளித்து உள்ளார்.

இதில், அவர்கள் மீது தீ பற்றி எரிந்த நிலையில், அங்கு இருந்தவர்கள் இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அங்கிருந்த போலீசார் மற்றும் பொது மக்கள், தீயை அணைத்து இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், தீ உடல் முழுவதும் முற்றிலுமாக எரிந்த நிலையில், உயிருக்கு தொடர்ந்து போராடி வந்த அந்த பெண்ணின் காதலன் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். தற்போது, அதன் தொடர்ச்சியாக, சிகிச்சை பெற்று வந்த அந்த பெண், தற்போது பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

தற்போது உயிரிழந்த பாதிக்கப்பட்ட பெண், தீக்குளிப்பதற்கு முன்பாக, அவர்கள் ஒரு பேஸ்புக்கில் லைவ் வீடியோவை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். 

அந்த வீடியோவில், பெண் எம்.பி.அதுல் ராய், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீதும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, அந்த பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண் பேசிய வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.