“விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன்?” என்று, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ள நிலையில், “லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டதாக” அந்த மாநில காவல் துறை தெரிவித்து உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் அங்குள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர்.

இந்த சூழலில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்த  கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்குள்ள பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா என்னும் இடத்தில் திரண்டு நின்று கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, அந்த வழியாக காரில் வந்த பாஜக வினரின் வாகனத்தை விவசாயிகள் முற்றிகையிட்ட போது, வண்டியை நிறுத்தாமல் அவர்கள் மீது காரை ஏற்றி 4 பேரை சம்பவத்திலேயே அவர்கள் மிருகத் தனமாக கொன்று உள்ளனர். 

குறிப்பாக, விவசாயிகள் மீது காரை ஏற்றிவிட்டு, பல விவசாயிகளையும் இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில், 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், பலரும் படுகாயம் அடைந்தனர். இதனால், கொதித்து எழுந்த விவசாயிகள், பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. 

முக்கியமாக, ஆஷிஷ் மிஸ்ராவின் காரை அடித்து நொறுக்கியதோடு, அந்த காரை தீயிட்டுக் கொளுத்தியும் உள்ளனர். இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றம் நிலவியதால், அங்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களை கலைத்தபோது அங்கு மிகப் பெரும் வன்முறை வெடித்தது. 

போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஏற்கனவே கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறை கலவரத்தால் 4 பேரும் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியான நிலையில், காயம் அடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் பாஜகவிற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தான், “விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?” என்று, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். 

இது தொடர்பாக டிவிட்டரில் பிரதமர் மோடிக்கு எழுப்பி உள்ள கேள்வியில், “எந்த உத்தரவும் எப்.ஐ. ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக உங்கள் அரசு (பிரதமர் மோடி) என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது” என்று, குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனையடுத்து, இது குறித்து மீரட் காவல் கண்காணிப்பாளர் வினீத் பட்னாகர், லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தடுக்கும் செயலில் ஈடுபட்ட காவல் துறையினருக்குத் தீக்காயங்கள் ஏற்பட்டன என்றும், இதைத் தொடர்ந்து சுமார் 18 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் கூறியுள்ளார்.