தாக்குதலில் உயிரிழந்தவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

pulwama attack2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் சிஆர்பிஎஃப் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். 

மேலும் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் 2019 பிப்ரவரி 26 அன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று பிப்.14 அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் : '2019 ஆம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூருகிறேன். அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகிறது” என தெரிவித்தார்.