மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, குருகுல கல்வி முறை, NTA எனப்படும் நுழைத்தேர்விற்கான அமைப்பு, 3 வயது முதலே கல்வியை தொடங்குதல், சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
 
தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கைக்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வியாளர்கள் வைத்த சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு மத்திய அரசு சில திருத்தங்களை செய்தது. இருப்பினும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
 
எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்வி வரைவு கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, ஆளுங்கட்சியான மாநில அரசும் சில விஷயங்களில் முரண்பட்டுதான் இருக்கிறது. அதன் வெளிப்பாடகவே தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு ஐந்து நாள்களுக்கு முன் அரசாணை வெளியிட்டுள்ளது.
 
அந்தக் குழுவில் சென்னை பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி ஆகியோரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணை வேந்தர் பிச்சுமணி, அழகப்பா துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலை. கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் என சொல்லப்பட்டது.

அந்தக் குழு, தற்போது தேசிய கல்வி கொள்கை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை பற்றி தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி கல்லூரி படிப்பிற்கு நுழைவுத்தேர்வு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அரசுக்கு உயர் கல்வித்துறை அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் ஒரு குழுவும், உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு குழுவும் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல தரப்பினரிடமும் கலந்தாலோசித்த உயர்கல்வித்துறை குழு மத்திய அரசுக்கு தனது அறிக்கையை இன்று அனுப்பியிருக்கிறது. அதில் கலை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு என்பதை ஏற்க இயலாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதேபோல் உயர்கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் அது ஏழை எளிய மாணவர்களை பாதிக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழக அரசிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்த்திருக்காது என கருதப்படுகிறது.

இதனிடையே உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவின் இந்த துரித நடவடிக்கைக்கும், அறிக்கைக்கும் கல்வியாளர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.