புதிய வகை கொரோனா புதிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. ஒன்றிய அரசு என்ன செய்யப்போகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

supremecourt

புதிய வைரசால் விழிப்புடன் இருக்குமாறு தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக மக்களையே கடந்த 2 வருடங்களாக கட்டுக்குள் வைத்து வருகிறது. பாகுபாடுன்றி உலகையே புரட்டி போட்ட இந்த கொரோனா வைரசை மருத்துவத்துறையினர் அதிவிரைவில் கொரோனா தடுப்பூசியை கண்டுப்பிடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அவ்வப்போது உருமாறி வீரியத்துடன் மக்களை தாக்கி வருகிறது.

அந்த வகையில் இப்போது புதிய வகை உருமாறிய மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் பரவி வருகிறது. உருமாற்றம் அடைந்த புதிய 'ஒமிக்ரான்' (B.1.1.529) வகை கொரோனா உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, பிரேசில், சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், வங்காளதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜிம்பாப்வே உள்ளிட்ட 12 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புரூணை, மியான்மர், கம்போடியா, திமோர், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுபற்றி தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறும்போது, பண்டிகைகள், பிற கொண்டாட்டங்களில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். எந்த வகையிலும் பாதுகாப்பு அம்சங்களை விட்டு விடக்கூடாது. நமது பிராந்தியத்தில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. புதிய வகை வைரஸ் கவலைக்குரியதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாம் தொடர்ந்து வரும் ஆபத்து, வைரசிடம் இருந்து நம்மை பாதுகாக்கவும், அதன் பரவலைத்தடுக்கவும், நம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது அவசியம் என்பதை நினைவுபடுத்துகிறது. நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைப்படுத்தலை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார். இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சர்வதேச விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, புதிய வகை கொரோனா வைரஸ், புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அரசின் தலைமை வழக்கறிஞர், "புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஓமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ள ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.