கொரோனா குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியுடன் பேச பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் மேற்குவங்கம் தேர்தலுக்கான பரப்புரையில் பிஸியாக இருப்பதாக பதில் வந்தது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமாக பரவி வருகிறது.

கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் இருக்கைகள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.


மேலும் மருத்துவ உபகரணங்கள், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், ''மகாராஷ்டிராவுக்கு இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளொன்றுக்கு தேவைப்படும். மாநிலத்தில்  ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் விமானப்படை விமானங்களை பயன்படுத்தி ஆக்சிஜன் கொண்டுவந்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை நான் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவர் மேற்கு வங்காள தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் தொடர்புகொள்ள முடியவில்லை.” என்றுள்ளார்.


இதற்கு பதிலளித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ’நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவுக்கு போதுமான மற்றும் தடையின்றி மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்படும் என்றும் 1,121 வென்டிலேட்டர்கள் கிடைக்கும் ’ என்று தெரிவித்துள்ளார்.