உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்  நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அம்மாநில பாஜக தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக அக்கட்சியில் இருந்து விலகி வருவது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு புறம் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் களம் சூடுப் படிக்கவும் தொடங்கி உள்ளது. 

அந்த வகையில், இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் தான், தற்போது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துக்கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அம்மாநிலத்தின் முக்கிய கட்சிகள் அதி தீவிரமாக அரசியல் காய்களை நகர்த்தி, பல்வேறு சித்து விளையாட்டுக்களை ஆடி வருகின்றன. 

கிட்டதட்ட 403 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

எனினும், அங்கு ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியான பாஜகவும், முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியும் வரிந்து கட்டி களப்பணி ஆற்றிக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான்,  உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சரான தொழிலாளர் நலத் துறை அமைச்சரான 68 வயதான சுவாமி பிரசாத் மவுரியா, நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இதனையடுத்து, அவர் பதவி விலகிய அடுத்த சிறிது நேரத்தில், அவர் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிகழ்வு, பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவம், இந்திய அளவில் பேசும் பொருளமாக மாறியது.

இந்த நிலையில் தான், பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அம்மாநில அமைச்சரான தாரா சிங் சவுகானும், இன்றைய தரினம் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். 

இவரும், சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாஜக மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி ஆளும் கட்சியாகவே இருந்தாலும், அந்த மாநில தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் கட்சியான பாஜகவிலிருந்து அடுத்தடுத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அடி மேல் அடியாகவும், இடி மேல் இடியாகவும் விழுந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது, இந்திய அளவில் பெரும் வைரலாகி வருவதுடன், இந்திய அரசில் களத்தில் முக்கிய விவாத பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, “உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து உள்ளதாக” தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.