பள்ளிக் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க சிசிடிவி  கேமராக்களை பொருத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

சமீப காலங்களில் பெண்கள் மீதும் பள்ளி மாணவர்கள் மீதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்தவண்ணம் உள்ளது. அதிலும் பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வு, வன்முறை போன்றவை அதிகரித்ததால் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

இந்நிலையில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க  உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பதை சுட்டிக்காட்டி  பள்ளிகளிலும் இதுபோன்ற நடவடிகைகளை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.  இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு விசாரணைக்கு வந்தது

அதனைத்தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளை  பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம்  என நீதிபதிகள் தெரிவித்தனர்.  மேலும் , அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மத்திய மற்றும் அனைத்து  மாநில அரசுகளும் இந்த மனு மீது பதிலளிக்குமாறும்   உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.