காதலித்து வந்த நிலையில், இளம் பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்ததால், கணவனை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த காதலி, காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா மேலனஹள்ளி கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஐஸ்வர்யா, கடந்த 2016 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் அங்குள்ள சித்ரதுர்காவுக்கு சுற்றுலா சென்று உள்ளார். அப்போது, அங்குள்ள பாகல்கோட்டை மாவட்டம் டவுன் நவநகர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரும் அங்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, அகாஷ் மற்றும் இளம் பெண் ஐஸ்வர்யா இடையே காதல் மலர்ந்து உள்ளது. அந்த காதல் மலர்ந்த தருணத்திலேயே இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். 

இதன் தொடர்ச்சியாக, காதலர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்தனர். அதே நேரத்தில், காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதலுக்கு இரு வீட்டார் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவுக்கு  17 வயது இருக்கும் போதே, அவரது பெற்றோர் முறைப்படி பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்து உள்ளனர். இதனையடுத்து, “எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்றும், மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை” என்றும், கூறிவிட்டு இளம் பெண் ஐஸ்வர்யா, அடுத்த சில நாட்களிலேயே தனது அம்மா வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், அவர்கள் விவகாரத்துக்கு விண்ணபித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனது அம்மா வீட்டிற்கு வந்த பிறகு, இளம் பெண் ஐஸ்வர்யா, தனது காதலன் ஆகாஷிடம் தனக்கு நடந்த கட்டாய திருமணம் பற்றி கூறி செல்போனில் கதறி அழுதுள்ளார். அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் மீண்டும் தங்களது காதலை செல்போனிலேயே வளர்க்கத் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் இளம் பெண் ஐஸ்வர்யா, வீட்டை விட்டு வெளியேறி பாகல்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த காதலன் ஆகாஷை சந்தித்து அவர்கள் இருவரும் அங்குள்ள ஒரு கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர். இதற்கு, காதலன் ஆகாஷின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, காதலர்கள் இருவரும் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்த நிலையில், ஐஸ்வர்யாவை தேடி அவரது தந்தையும், சகோதரரும் பாகல்கோட்டைக்கு வந்துள்ளனர். இதனால், “அவர்கள் தங்களைப் பிரித்து விடுவார்கள்” என்று நினைத்த காதலர்கள் இருவரும், தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு பாகல்கோட்டை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பாகல்கோட்டை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து மகள் ஐஸ்வர்யாவை பார்த்ததும் அவரது தந்தை, தன்னுடன் வந்துவிடும்படி கூறி கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார். மேலும், ஐஸ்வர்யாவின் தந்தை, காதலன் ஆகாஷின் காலில் விழுந்து, “என் மகளை விட்டு விடு” என்று கதறி அழுதுள்ளார். ஆனால், காதலர்கள் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் அவரது சகோதரரைச் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.