“நவீன இந்திய பெண்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல், தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்” என்று, கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் கவலையுடன் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், கலந்துகொண்டார். அப்போது விழாவில் பேசிய அவர், “இன்று, இதை உங்கள் முன்பாக சொல்வதற்கு நான் வருந்துகிறேன்”என்று, பீடைகை போட்டார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் உள்ள பல நவீன பெண்கள் தனிமையில் இருக்க விரும்புகிறார்கள்” என்றும், குறிப்பிட்டார்.

அத்துடன், “அப்படி தனிமையில் இருக்க விரும்பும் பல நவீன பெண்களும் திருமணம் செய்துகொண்டாலும், குழந்தையை பெற்றெடுக்க விரும்பவில்லை என்றும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறவே அவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்” என்றும், கவலையும் தெரிவித்தார். 

மேலும், “நமது சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நல்லதல்ல” என்றும், அமைச்சர் சுதாகர் கவலையுடன் கூறினார்.

முக்கியமாக, “இந்திய சமுதாயத்தில் மேற்கத்திய செல்வாக்கு உள்நுழைந்திருப்பது பற்றி” வருத்தம் தெரிவித்த அமைச்சர் சுதாகர் “துரதிருஷ்டவசமாக, இன்று நாம் மேற்கத்திய வழியில் செல்கிறோம்” என்றும், சுட்டிக்காட்டினார். 

“பெற்றோர் நம்முடன் வாழ்வதை நாம் விரும்புவதில்லை என்றும், தாத்தா - பாட்டி நம்முடன் இருப்பதை மறந்து விட்டோம்” என்றும், அவர் வேதனையுடன் கூறினார். 

“இந்தியாவில் 7 ல் ஒரு இந்தியருக்கு ஒருவித மன நலப் பிரச்னை இருக்கிறது என்றும், இது லேசானது மற்றும் மிதமானதாக அல்லது கடுமையானதாக இருக்கலாம்” என்றும், அவர் வெளிப்படையாகவே பேசினார்.

குறிப்பாக, “மன அழுத்த மேலாண்மை ஒரு கலை என்றும், இந்த கலையை இந்தியர்களாக நாம் கற்க வேண்டியதில்லை” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

“மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை நாம் உலகுக்கு போதிக்க வேண்டும் என்றும், ஏனென்றால் யோகா, தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவை நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகிற்கு கற்பித்த அற்புதமான கருவிகள்” என்றும், கர்நாடக சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

இதனிடையே, பெண்கள் குறித்த அமைச்சரின் இந்த பேச்சு இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிபிடத்தக்கது.