ரயிலில் பீகார் எம்எல்ஏ ஒருவர், அரை நிர்வாணத்துடன் உலா வந்த புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற 'தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின்' ஏசி கோச்சில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல் ஏவான கோபால் மண்டல் என்பவர், நேற்றைய தினம் பயணம் செய்தார். 

இந்த ரயில் பயணத்தின் போது, எம்எல்ஏ தனது ஆடைகளைக் களைந்து விட்டு வெறும் ஜட்டி - பனியனுடன் அந்த ரயிலில் அங்கும் இங்குமாக நடந்து சென்று உள்ளார். இதனைப் பார்த்த சக ரயில் பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அத்துடன், வெறும் ஜட்டி - பனியன் அணிந்து, அரை நிர்வாணத்துடன் உலா வருவது ஒரு எம்எல்ஏ தான், என்பது அங்கிருந்த சிலருக்குத் தெரிந்திருந்தது. இதனால், அவர்கள் இன்னும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், பொது மக்கள் செல்லும் ஒரு ரயிலில் எம்எல்ஏ ஒருவர், துளியும் கூச்சமின்றி இந்த மாதிரியாக அநாகரிகமாக நடந்து கொண்டதால், நொந்து போன சக பயணிகள் சிலர், இது தொடர்பாக அந்த எம்எல்ஏ விடமும், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

முதலில், பொது மக்கள் முன்பாக அநாகரிகமாக நடந்து கொண்டவர் எம்எல்ஏ என்று தெரியாமலேயே அறியாமலேயே, அவருடன் சக பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. 

அப்போது, அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பிரச்சனை பெரிதாக மாறி உள்ளது. அப்போது தான், தான் ஒரு எம்எல்ஏ என்பதை அவர் கூறியதாகவும், அதன் படியே அங்குள்ள சிலருக்கு அவர் எம்எல்ஏ என்பது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் சிலர், அவருக்கே தெரியாமல் அவரை தங்களது செல்போனில் போட்டோ எடுத்த நிலையில், சிலர் எம்எல்ஏ வின் நடவடிக்கை குறித்து, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடமும் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், அவர்கள் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், எம்எல்ஏ ஜட்டி மற்றும் பனியனில் அந்த ரயிலில் வீர நடைபோட்ட புகைப்படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் வைரலாகி வருகிறது. இதற்கு இணைய வாசிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏ கோபால் மண்டல் பேசும் போது, “நான் ரயிலில் ஏறியதில் இருந்தே எனக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது என்றும், அதனால் தான் ஜட்டி பனியனில் நான் இருக்க நேர்ந்தது” என்றும், அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

“மேலும், “மற்றபடி நான் எவ்வித ஆபாசமான செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், நான் பொய் எதுவும் சொல்ல வில்லை என்னை நம்புங்கள்” என்றும், அவர் கூறியுள்ளார்.