கையில் ஈட்டியுடன் லடாக் எல்லைக்கு வரும் சீன ராணுவ வீரர்களின் சாட்டிலைட் புகைப்படம் வைரலாகி வருவதால், எல்லையில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டு உள்ளது. 

இந்தியா - சீனா எல்லையான லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல், சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், அப்போது முதல் தற்போது வரை தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலின் போது, இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா ராணுவம் தரப்பிலும் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சீனா தனது 

ராணுவத்தை அங்குக் குவித்த நிலையில், இந்தியாவும் தனது பங்கிற்கு ராணுவத்தை வழக்கத்தை விட அதிக அளவில் அங்குக் குவித்ததால், எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தன.

இதனால், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ மந்திரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் அடுத்தடுத்து நடைபெற்றன. ஒவ்வொரு முறை பேச்சு வார்த்தை நடத்தப்படும் போதும், எல்லையில் இருந்து சீனா ராணுவத்தை பின் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனாலும், அவ்வப்போது. சீனா தனது எல்லை தாண்டிய அத்து மீறலில் தொடர்ந்து நடத்தி வந்தது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்தியாவின் லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியைத் தாண்டி, இந்திய வீரர்கள் அங்குள்ள பாங்கோங் ஏரி சமவெளிப் பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, சீன ராணுவம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. ஆனால், “சீனாவை எச்சரிக்கை வகையில் 

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா? அல்லது சீனாவின் வீரர்களை நோக்கி இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை இந்தியா நடத்தியதா?” என்பதைப் பற்றி சீனா எதுவும் விளக்கமாக கூறவில்லை. 

ஆனாலும், “இந்தியாவின் இந்த துப்பாக்கிச் சூட்டிற்குத் தக்க பதில் நடவடிக்கை கொடுத்தோம்” என்றும் சீனா கூறியது. சீனாவின் இத்தகையான குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்பியது. அதே நேரத்தில், முன்பைப் போலவே, இந்திய எல்லையில் சீனா அத்துமீறி விட்டு, இந்தியா மீது பழிபோடுகிறதா? என்ற சந்தேகமும் கேள்விகளும் எழுந்தன. .

இது தொடர்பாக இந்தியா தரப்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில், “இந்தியா சார்பில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. சீனாவின் இந்த குற்றச்சாட்டால், லடாக்கில் நேற்று முன் தினம் முதல் மீண்டும் இரு நாட்டு எல்லை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. இதன் காரணமாக, எல்லையில் கடந்த 2 நாட்களாகப் போர் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையில், இந்தியா - சீனா எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில், சீன ராணுவ வீரர்கள் கைகளில் ஈட்டி கம்புகளுடன் அணி வகுத்து இந்திய எல்லையை நோக்கி முன்னேறி வரும் சாட்டிலைட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன் மூலம், கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலைப் போலவே, மீண்டும் துப்பாக்கி இல்லாமல் ஈட்டியைக் கொண்டு இந்திய ராணுவத்தைத் தாக்கி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டு இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனிடையே, கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 30 க்கும் மேற்பட்ட வீரர்களும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சீன வீரர்களின் இந்த ஈட்டி ஏந்திய புகைப்படம் கடந்த ஜுன் மாதம் 15 ஆம் தேதி சம்பவத்தையே நினைவுபடுத்தத் தோன்றுகிறது. இதன் காரணமாக, எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது.