நாய்க்கு மனைவியின் செல்லப்பெயரை வைப்பதா என பக்கத்து வீட்டு பெண்ணை தீ வைத்து எரித்த கணவன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

fire

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீடாபென் சர்வையா என்ற பெண்மணி செல்லப்பிராணியான நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு சோனு எனப் பாசமாக பெயரிட்டு அழைத்து வந்துள்ளார். நீடாபென் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சூராபாய் பர்வத். இவர் தனது மனைவியை செல்லமாக சோனு என்று அழைப்பாராம். இதனால் நீடாபென் தனது நாயை செல்லமாக  சோனு என்று அழைக்கும்போது பர்வத்திற்கு கோபமாக வந்துள்ளது.

இந்நிலையில் பர்வத் தன் மனைவியை செல்லமாக சோனு என்று தாம் அழைக்கும்போது நாய்க்கு அந்த பெயரை வைத்து பக்கத்து வீட்டு பெண் அழைக்கிறாரே? என கடுங்கோபம் அடைந்துள்ளார். நேற்றுமுன்தினம் நீடாபென் தனது கணவர் வெளியே சென்ற நேரம் இளைய மகன் உடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஐந்துபேரை அழைத்துக்கொண்டு நீடாபென் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பர்வத். மேலும் நீடாபென்னை தாக்கியுள்ளார்.  இவர்களிடம் இருந்து தப்பிக்க நீடாபென் சமையல் அறைக்குள் ஓடியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து  பர்வத் உடன் வந்த நபர் ஒருவர் சமையல் அறையில் இருந்து மண்எண்ணெயை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்துள்ளார். சூடு தாங்காமல் நீடாபென் அலறி துடிக்க பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்ற ஓடி வந்துள்ளனர். அதேசமயம் வெளியில் சென்றிருந்த நீடாபென்னின் கணவரும் வீடு திரும்பினார். தனது மனைவி மீது தீ எரிவதை கண்டு தான் அணிந்திருந்த கோட்-ஐ கழற்றி தீயை அணைத்துள்ளார்.

மேலும் நீடாபென் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. ஆனால் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு வீட்டாருக்கும் இடையில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நாய்க்கு வைக்கப்பட்ட பெயரால் பெண் ஒருவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் வினோதமாக பார்க்கப்படுகிறது.