ஹிஜாப் தடையை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் மாணவிகள் அல்ல, பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என உடுப்பி கல்லூரி துணை தலைவர் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, முஸ்லிம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்நிலையில், பா.ஜ.க.வின் ஓ.பி.சி. பிரிவு பொது செயலாளர் மற்றும் உடுப்பி கல்லூரியின் வளர்ச்சி குழு துணை தலைவரான யஷ்பால் சுவர்ணா செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, கோர்ட்டுக்கு சென்ற 6 பேரும் நான் முன்பே கூறியது போன்று மாணவிகள் அல்ல.  அவர்கள் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள். 3 நீதிபதிகளுக்கு எதிராக அவர்கள் அறிக்கை வெளியிட்ட விதம், அவர்கள் பயங்கரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என நிரூபித்து உள்ளது.  ஐதராபாத்தில் இருந்து வந்த ஒரு பயங்கரவாத அமைப்பு, ஊடகங்களிடம் என்ன கூற வேண்டும் என அவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளது.

அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தொடர்புடைய அமைப்புகளை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.  இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவோர், இங்கே வாழவோ அல்லது பணியாற்றவோ அனுமதிக்க கூடாது.  அவர்களது நம்பிக்கையை வளர்க்க கூடிய நாட்டுக்கு அவர்கள் செல்லட்டும்.  மற்ற ஏழை மாணவ மாணவிகளை அவர்கள் இடையூறு செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்த 6 மாணவிகள், படிக்கவோ, தேர்வு எழுதவோ விருப்பம் இல்லை.  அவர்களுக்கு கல்வி கொள்கையை அழிப்பதும் மற்றும் பிற மாணவர்களை தொந்தரவு செய்வதுமே நோக்கம் என்றும் குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.