“திரைப்பட படப்பிடிப்பு காலங்களில் பேய் வசித்த வீட்டில் நான் வசித்தேன்” என்று, பாஜகவை சேர்ந்த மூத்த நடிகை ஹேம மாலினி, பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்கிற பழமொழி தமிழகத்தில் உண்டு. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த உலகத்தில் “பேய் இருக்கா? இல்லையா?” என்கிற கேள்வி இங்கு எல்லோருக்குள்ளேயும் இருக்கவே செய்கிறது.

இந்த நிலையில் தான், பாலிவுட் மூத்த நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி மும்பையில் உள்ள  தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியானது, தற்போது வைரலாகி வருகிறது.

ஹேம மாலினி அளித்துள்ள அந்த பேட்டியில், “எனது ஆரம்பக்கால சினிமா வாழ்க்கையில், சில நாட்கள் பேய் வசித்த வீட்டில் நான் வசித்து வந்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“ கடந்த 1968 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான 'ஸ்வப்னா சவுதாகர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக, பாந்த்ராவில் இருக்கும் மன்வேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் நான் தங்கினேன் என்றும், அப்போது அந்த பிளாட் முற்றிலும் சிறியதாக இருந்தது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “அதன் தொடர்ச்சியாக அங்குள்ள ஜூஹுவின் 7 வது சாலையில் இருக்கும் ஒரு பங்களாவில் நாங்கள் தங்கினோம் என்றும், அந்த பங்களாவில் என் அம்மாவுடன் நான் தூங்கினோம் என்றும், அப்படி அங்கு தங்கிய ஒவ்வொரு நாள் இரவும், யாரோ ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் தினம் தினம் நான் உணர்ந்தேன்” என்றும், அதிர்ச்சியூட்டும் தகவலைத் தெரிவித்திருக்கிறார். 

“இந்த விஷயங்கள் கொஞ்சம் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், இது உண்மையே” என்றும், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 

“ஒரு முறை அல்லது 2 முறை நடந்திருந்தால் கூட அதை நான் முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாம் என்றும், ஆனால் எனக்கு அந்த நிகழ்வு அங்கு தங்கியபோதெல்லாம் மீண்டும் மீண்டும் யாரோ என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் தினம் தினம் நான் உணர்ந்தேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும், “அங்கு தங்கிய போதெல்லாம் எனக்கு ஒருவித பய உணர்வு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது என்றும், அதன் பிறகு நாங்கள் அந்த வீட்டை காலி செய்து விட்டு, சொந்தமாகத் தனி குடியிருப்பு ஒன்றை விலைக்கு வாங்கினோம்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இப்படியாக, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த பேய் சம்பவத்தை, இபபோது நினைத்தால் கூட, திகிலாகவே இருக்கிறது” என்றும், ஹேமா மாலினி தற்போது கூறியுள்ளார்.

ஹேமா மாலினியின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் வேடிக்கையான கருத்துக்களைக் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.