பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் செயல் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்த சட்ட தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக அரசு அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.  ஆனால் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. 

மேலும் அதனுடன் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தில் மத்திய  அரசு சார்பில் அவகாசம் கோரியது. பேரறிவாளன் விடுதலையில் முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையதல்ல என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுவிக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. பேரறிவாளன் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆளுநர் குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விஷயத்தில் போகாமல் நாங்கள் ஏன் உத்தரவிடக் கூடாது ? பேரறிவாளனை விடுவிப்பது மட்டுமே இந்த வழக்கை முடித்து வைக்க ஒரே தீர்வு என நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து பேசிய உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்த கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பின்படி பேரறிவாளன் விவகாரத்தில் அமைச்சரவையை முடிவெடுக்கலாம். அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சென்றால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என ஏற்கனவே தெளிவாகிவிட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் வழக்கு வரும் புதன்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவு சிறை அதிகாரிகளுக்கு கிடைக்காத நிலையில் , பேரறிவாளன் பரோலில் இருந்து தொடர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவு புழல் சிறை அதிகாரிகளுக்கு கிடைத்ததை அடுத்து பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் இருந்து  புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பின்னர் பேரறிவாளன் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.