மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் நாகாலாந்து ஆளுநருமான அஸ்வனி குமார் நேற்று (அக்டோபர்7) புதன் கிழமை சிம்லாவில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது அதிகார மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சிம்லா போலீஸ் கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா முன்னாள் ஆளுநரான அஸ்வனிகுமார் தூக்கில் தொங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வெளியிட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது என்றார்

இமாச்சல பிரதேச காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி குமார் நேற்று மாலை வாக்கிங் சென்றுவிட்டு வந்து திரும்பி வந்ததும் தன் அறைக்கு சென்று தூக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் போலீஸார்.
 
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் குழுவினர், இமாசல பிரதேச டிஜிபி ஆகியோர் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ``அவரது குடும்பம் அதிர்ச்சியில் உள்ளது. அவர் நேற்று மாலை வரை நன்றாக இருந்தார். அவரை அந்த நடவடிக்கை எடுக்க வைத்தது என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்கள் போலீஸ் குழுவினர்.

1973 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வனி குமார் 2008- 2010 களில் சிபிஐ இயக்குநராக பணியாற்றினார், ஆருஷி தல்வார் கொலை வழக்கு போன்ற வழக்குகளில் விசாரணைகளை மேற்கொண்டவர். குறிப்பாக ஆருஷி தல்வார் கொலையில் புதிய குழுவை அமைத்து பெற்றோரின் மீதான சந்தேக நிழலை கண்டுபிடித்தவர். மேலும் காமன்வெல்த் விளையாட்டு மோசடி குறித்து அவர் ஒரு விசாரணையைத் தொடங்கினார், அஸ்வனி குமாரின் பதவிக்காலத்தில் தான் இப்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா மீது சோஹ்ராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.

காங்கிரஸ் ஆட்சியில் நாகாலாந்து ஆளுநர் பதவியில் இருந்த அஸ்வனி குமார், 2014 ல் மோடி அரசு பதவியேற்றதும் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் நியமனம் செய்யப்பட்டவர்களை நீக்க முற்பட்டதால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சிபிஐ உயரதிகாரியும், முன்னாள் ஆளுநருமான அஸ்வனி குமாரின் தற்கொலைக் குறிப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு அரசியல் அதிகார வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது,.

இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்வானி குமார் 2006 முதல் 2008 (ஜூன்) வரை அம்மாநில டிஜிபி-யாக செயல்பட்டுள்ளனர். பின்னர் பதவி உயர்வு காரணமாக 2008 (ஆகஸ்ட்) முதல் 2010 வரை சிபிஐ அமைப்பின் இயக்குநராக செயல்பட்டார். 

இதையடுத்து, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மணிப்பூர், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் கவர்னராகவும் அஸ்வானி குமார் செயல்பட்டுள்ளார். 69 வயது நிரம்பிய இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். அஸ்வானி குமார் தனது குடும்பத்துடன் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அஸ்வானி குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஸ்வானி குமாரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என சொல்லப்படுகிறது.

மன அழுத்தம் காரணமாகவே அஸ்வானி குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.