கேரளாவில் மகளிர் தினத்தன்று பணியில் சேர்ந்த முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனர். அவரிடம் இன்று ஆம்புலன்சின் சாவியை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டப்படுகிறது. பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  கேரளாவின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக தீபாமோல் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அவர் தனது பணியை தொடங்கினார். அவரிடம்  இன்று ஆம்புலன்சின் சாவியை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார்.

கேரள மாநில சுகாதாரத் துறையின் விபத்து சிகிச்சை திட்டம்- கனிவ் 108 என்கிற காயமடைந்த பாதிக்கப்பட்டவர்களுக்கான கேரள ஆம்புலன்ஸ் நெட்வொர்க் திட்டத்தின் கீழ் அவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இது விபத்து மற்றும் அவசரகால மருத்துவ சேவை பிரிவு ஆகும்.

மேலும் புதிதாக பணியமர்த்தப்பட்ட தீபாமோல், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கைதேர்ந்த ஓட்டுனர் ஆவார். அவர் பல வருடங்களாக பல்வேறு வாகனங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.  தீபாமால் 2008-ல் ஓட்டுநர் உரிமம் பெற்றார், 2009-ல் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றார். சிறிய ஓட்டுநர் பள்ளியையும் நடத்தி வருகிறார். 2021-ம் ஆண்டில், அவர் தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்திலிருந்து லடாக் வரை 16 நாட்களில் சென்று சாதனை படைத்தவர். திருச்சூரில் நடைபெற்ற ஆஃப்-ரோட் டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து இதுகுறித்து மந்திரி வீணா ஜார்ஜ்  கூறுகையில், “பல மாவட்டங்களிலும் பெண் ஓட்டுனர்கள் நியமிக்கப்படுவார்கள். பெண்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாக கொண்டு, ஆர்வமுடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மீது காலங்காலமாக இருந்து வரும் கருத்துக்களை உடைக்க  முடியும்.மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது. தீபாமோல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் “என்னுடைய கனவு நினைவேறியது. எனது கனவை நிறைவேற்ற உதவியவர்களுக்கு நன்றி. பெண்கள் சமையலறையில் மட்டும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவர்கள் எந்த வேலையையும் தொடர முன்வர வேண்டும். பெண்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று தீபாமோல் தெரிவித்தார். சாலை விபத்தில் விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாவதை தவிர்க்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு ஆம்புலன்ஸ் சேவை கனிவு-108யின் முதல் பெண் ஓட்டுனராக தீபாமோல் பணியை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.