“புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இது மேலும் வலுவடைந்து வங்க கடலில் நாளை மறுதினம் புயலாக வலுப்பெறுகிறது” என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரம் அடைந்து, கடந்த 20 நாட்களாக கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இயல்பை விட அதிக மன மழை பெய்து, பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது.

இப்படியாக, வட கிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்த நீலையில் தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83 சதவீதம் அதிகமாக மழை பெய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் நள்ளிரவில் பரவலாக மழை பெய்த போதிலும், தமிழகத்தில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகிறது. 

அத்துடன், “2 நாட்களுக்கு மழை குறைந்துதான் காணப்படும்” என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதே போல், தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, குமரி கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதன்படி, “இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பிற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்” என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.

அதே போல், “நாளையும், நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், 4 ஆம் தேதி சனிக்கிழமை ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு” உள்ளது என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகி இருக்கிறது. 

இது, தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது.

அதன் பிறகு “மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடைகிறது என்றும், 4 ஆம் தேதி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடல் பகுதியை நெருங்கக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக தமிழகத்துக்கு கன மழைக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும், ஆனால் அந்தமான் கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் இன்றும், தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளையும், மத்திய வங்க கடல் பகுதியில் நாளை மறுதினமும், 4 ஆம் தேதி மத்திய, மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த நாட்களில் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.