கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corono test

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட வேண்டாம் எனவும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. 

இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து  தமிழகத்தில் ஒமிக்ரானை  எதிர்கொள்ளத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முககவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ஸ்ரீரங்கபட்டினத்தில் இருந்து 3 பஸ்களில் தமிழகத்துக்கு சுற்றுலா வந்த 100 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு வந்து விட்டு தங்கள் மாநிலத்துக்கு திரும்பி உள்ளனர். ஒவ்வொரு பஸ்களில் 35 பேர் வரை இருந்துள்ளனர். கர்நாடகாவில் அந்த மாநில அரசும் கொரோனா பரவலை தடுக்க தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மேல்மருவத்தூரில் இருந்து சென்றவர்களுக்கு நடந்த பரிசோதனையில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இதனை பற்றிய தகவல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழக சுகாதாரத்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள சுகாதார அலுவலர்களை உஷார் படுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் கோவிலில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்த 3 பஸ்களில் 2 பஸ்கள் மட்டுமே அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் தான் 35 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பஸ்சில் இருப்பவர்கள் விரைவில் கர்நாடகா திரும்ப உள்ளனர்.

இவர்கள் மேல்மருவத்தூர் சென்று விட்டு மேலும் பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் கர்நாடகா செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அந்த பஸ் கர்நாடகா சென்றதும் அதில் இருப்பவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படள்ளது. இந்த பரிசோதனையின் போது அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடக பக்தர்களுக்கு கொரோனா உறுதியானதால் மேல்மருவத்தூர் கோவில் ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் கோவிலில் கடை வைத்திருப்பவர்கள், தங்கும் விடுதி ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய செங்கல்பட்டு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.