டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துவுள்ளார்.

republic day

குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும். இதில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.  இதில் சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களின் போராட்டங்கள் குறித்த சிறப்புகளை கூறும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன.  

தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில், சுதந்திர போராட்டத் தியாகிகளான கப்பலோட்டிய தமிழகர் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் தேசிய அளவில் மிகவும் பிரபலமானவர்கள் இல்லை என கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழாவில் இடம் பெறுவதற்காக அலங்கார ஊர்தி மாடல் அனுப்பப்பட்டது. அதில் சுதந்திர போராட்டத் தியாகிகளான வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 ஆவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார். அதில்  உடனடியாக பிரதமர் தலையிட்டு தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று பதில் அனுப்பி இருந்தார்.

மேலும் அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது, இந்த ஆண்டு ‘இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இடம்பெற வேண்டி, விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, 3 முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். 4-வது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமும் இன்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த எனது வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் கடிதத்தில், எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த 250 ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும். முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணி வாள் வீசுவதற்கு ¾ நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார்.

மேலும் ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன்களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பரனார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தனது வீரமிக்க கவிதைகளால் விடுதலை வேள்வி செய்தவர் பாரதியார். இத்தகைய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகத்தான் நமது அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டுப் பற்றிலும், விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் அந்த அலங்கார ஊர்தி இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும். மேலும் சமீபத்தில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்படக் கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் இருந்தது.