ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் இசட் பிரிவு பாதுகாப்பு!
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து இந்திய மஜ்லிஸ் இ-இதயத்துல் முஸ்லிம் அமைப்பின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஐதராபாத் தொகுதி எம்.பி.ஆகவும் உள்ளார். இவர் சட்டசபை தேர்தலையொட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உத்தரபிரதேசம் சென்றிருந்தார். நிகழ்ச்சிக்குப் பின் அவர் டெல்லி சென்று கொண்டிருந்தபோது அவரது கார்மீது மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவு வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பு எனது கார் சிஜார்சி டோல்கேட் அருகே சுடப்பட்டது. 4 சுற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அவர்கள் 3-4 பேர் இருந்தனர், பின்னர் அவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். எனது கார் பஞ்சர் ஆனது, ஆனால் நான் வேறு காரில் சென்றுவிட்டேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.” என தெரிவித்தார். இதற்கிடையே ஓவைசி கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து ஒவைசியின் பாதுகாப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர், அவருக்கு மத்திய ரிசர்வ் காவல் படையின் இசட் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீரட்டில் கித்தூத் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்குச்சூடு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவரின் பெயர் சச்சின் என்றும் நோய்டாவை சேர்ந்த அவரின் மீது ஏற்கெனவே கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படிப்பை முடித்துள்ளதாக அவர் தெரிவித்த நிலையில், அதை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்து வலதுசாரி அமைப்பின் உறுப்பினராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரின் பெயர் சுபம் என்பதும் அவர் சஹாரன்பூரை சேர்ந்த விவசாயி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது, ஓவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பரூதின் ஓவைசி ஆகியோரின் கருத்து தங்களை கோப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் வாங்கியுள்ள நாட்டு துப்பாக்கிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. காவல்துறையினர் அதை விற்றவர்களை தேடிவருகின்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவரை காவலில் எடுக்க போலீசார் கோரிக்கை விடுக்க உள்ளனர்.