கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன்  பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவானது அக்டோபர் 28-ம் தேதியான இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கட்ட நிபந்தனைகளுடன் பீகார் சட்டசபை தேர்தலுக்கான மூன்றுகட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவானவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 114 பெண்கள் உட்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

மூன்றுகட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய அரசு 30,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை பாதுகாப்பு பணியின் ஈடுபடுத்தியுள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. 7 லட்சம் சானிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்தத் தேர்தலில் இரண்டு கோடி மக்கள் வாக்களிக்கின்றனர்.

இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு எளிதாக இருக்க, அவர்களுக்காக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, இன்று மட்டும் 52,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தலை முன்னிட்டு, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்பதை உறுதி செய்யுமாறு அனைத்து வாக்காளர்களையும் கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேபோல், பீகார் மக்கள் தங்கள் வாக்குரிமையை தவறாமல் நிறைவேற்றும்படி ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார். சிறந்த எதிர்காலம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.