இளம் பெண்ணை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல், கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம், உச்சக்கட்ட கொடூரத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுவதோடு, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவர், 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்கார கொடுமைக்கு ஆளாகித் தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

அந்த வீடியோவில், ஒரு இளம் பெண்ணை 5 பங்களாதேஷ் ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அந்த பெண்ணின் தனிப்பட்ட பாகத்தில் மது பாட்டிலால் தாக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.  

அந்த வீடியோவை பார்த்த இணைய வாசிகள் பலரும், கொதித்து எழுந்த நிலையில், தங்களது கோபத்தைக் கடுமையான கண்டனங்களாகத் தெரிவித்து வந்தனர்.

அதே நேரத்தில், இந்த வீடியோவை போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து, “இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது” என்கிற விபரம் தெரியாமல் இருந்து வந்தது. 

இதையடுத்து, “சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ளவர்களைப் பற்றி தகவல் தருபவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும்” என்று, அசாம் மாநில காவல் துறை 
அறிவித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவில் உள்ள அனைவருமே பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று, போலீசார் கண்டுபிடித்தனர். அந்த 5 பேரும், அந்த பெண்ணை பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இளம் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 23 வயதான சாகர், ஹகில், 25 வயதான ரிடோய் பாபோ, 30 வயதான முகமது பாபு சாஹிக் மற்றும் ஒரு பெண் என அந்த 5 பேரையும் பெங்களூரு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், “கைதானவர்களும் பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காள தேசம் நாட்டிலிருந்து வந்த 
ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள்” என்பது தெரிய வந்தது. 

அத்துடன், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை தேடுவதற்காக அண்டை மாநிலத்திற்கு போலீசார் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்க போலீசார் தற்போது முடிவு செய்து உள்ளனர்.

குறிப்பாக, “இவர்களுக்குள் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக” முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, உயர் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பெங்களூரு நகர காவல் ஆணையாளர் கமல் பன்ட் தெரிவித்து உள்ளார்.

அத்துடன், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண் கிடைத்த பிறகே முழுமையான காரணங்கள் என்னவென்று தெரிய வரும் என்றும், போலீசார் தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.