பெங்களூருவில் முழு அடைப்பு அமைதியாக நடந்ததாகவும், சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.

இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.

உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலில் முஸ்லிம் அமைப்பினர் கடை அடைப்பு நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, “ஹிஜாப் அத்தியாவசியமான நடைமுறை அல்ல என கர்நாடக ஐகோர்ட்டு  தீர்ப்பு அளித்ததை ஏற்க முடியாது. பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க கோரியும், தீர்ப்பை ரத்து செய்யக்கோரியும் கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு நடத்தப்படும் என அறிவித்தது.

மேலும் இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. குறிப்பாக உடுப்பி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முழு அடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மாவட்ட பகுதியில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இஸ்லாமிய மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இந்நிலையில் இந்த பந்த்துக்கு எஸ்டிபிஐ, சிஎப்ஐ உள்பட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை காட்டி வருகின்றனர். பெங்களூர், தட்சிண கன்னட மாவட்டம் மங்களூர், தார்வார் மாவட்டம் உப்பள்ளி, உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் உள்பட மாநிலத்தின் சில இடங்களில் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டது.

பெங்களூரில் மார்ச் 21 வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அங்கு ஊர்வலம், போராட்டம் நடத்த அனுமதியில்லை. இதனால் மாநிலத்தின் பிற இடங்களில் மக்கள் ஒன்றாக கூடி ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பந்த் காரணமாக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக ரிசர்வ் படை போலீசார், மாவட்ட ஆயுத படை போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கிடையே ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு ஹோலி விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது: ஹிஜாப் விவகாரம் காரணமாக முஸ்லிம் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். முழு அடைப்பின் போது பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளை அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்திருந்தனா். அதன்படி, பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடந்தது.

ஏற்கனவே பெங்களூரு நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சிறிய அளவிலான அசம்பாவிதம் கூட நடைபெறவில்லை. முஸ்லிம் அமைப்புகளும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்கள். பெங்களூரு சிவாஜிநகர், பிரேசர் டவுன், மெஜஸ்டிக், கமர்சியல் தெரு, டேனரி ரோடு, பம்பு பஜார், சிட்டி மார்க்கெட்டை சுற்றிய பகுதிகள் என சில பகுதிகளில் மட்டும் முழு அடைப்பு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வியாபாரிகளும் தாங்களாக வே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர். டி.ஜே.ஹள்ளி பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அங்கு இன்று காலையில் போலீசார் அணிவகுப்பும் நடத்தினார்கள். பெங்களூருவில் முழு அடைப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், பொதுமக்களுக்கு எந்த விதமான தொந்தரவும் ஏற்படவில்லை.