65 வயது பாட்டியை 85 வயது தாத்தா, காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த திருமணத்தில் முதியவரின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் என பலரும் கலந்துகொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் தான் இப்படி ஒரு ஆச்சரிய திருமணம் நடந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியைச் சேர்ந்த 85 வயதான முஸ்தபா என்ற முதியவர், அந்த பகுதியில் இறைச்சிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மனைவி குர்ஷித் பேகம், இவருடன் வசித்து வந்த நிலையில் இந்த தம்பதிக்கு 9 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி  அனைவரும் தனித் தனியாக தங்களது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், 85 வயதான முஸ்தபா மட்டும், தனது மனைவி குர்ஷித் பேகமுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தான், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, குர்ஷித் பேகம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். 

இதனையடுத்து, வயது முதிர்ந்த முஸ்தபா தனிமையில் வசித்து வந்தார். அத்துடன், வயோது மூப்பு காரணமாக கடும் அவதிப்பட்டு வந்த முஸ்தபா, தனக்கு ஒரு துணை வேண்டும் என்றும், உணர்ந்தார். 

அதன் தொடர்ச்சியாக, முஸ்தபா, அதே பகுதியில் தனிமையில் வசித்து வந்த 65 வயதான பாத்திமா பேகம் என்ற மூதாட்டியை சந்தித்து பேசி வந்தார். இவர்கள் இருவரும் தொடர்ந்து நன்றாக பேசி பழகி வந்தனர்.

இந்த நிலையில் தான், சமீபத்தில் “உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று, பாத்திமா பேகமிடம், முஸ்தபா கேட்டிருக்கிறார்.

அப்போது, முஸ்தபாவின் காதலை பாத்திமா பேகம் ஏற்றுக் கொண்டார். “வயது முதிர்ந்த நிலையில் இது தேவைதானா?” என்று? பலரும் கிண்டல் செய்த நிலையில், 85 வயதான தந்தை முஸ்தபாவின் திருமணத்திற்கு அவரது மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் என அனைவரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

அதன்படி, முஸ்தபாவின் மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து, முஸ்தபாவுக்கும் - பாத்திமா பேகத்திற்கும் திருமணம் நடத்தி வைத்து உள்ளனர். 

முஸ்தபாவின் வீட்டில் மிகவும் எளிமையான முறையில் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. திருமணத்திறகுப் பிறகு, புதுமண தம்பதியிடம், அனைவரும் ஆசி பெற்றனர். இந்த திருமணம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.