சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு!

சிவசங்கர் பாபாவை பார்க்க குவிந்த பக்தர்கள்.. 15 நாட்கள் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு! - Daily news

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடியாக
உத்தரவிட்டுள்ளது.

கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளியில் படித்து வந்த மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டதால், சென்னை மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இது தொடர்பாகத் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான சிவசங்கர் பாபாவை டெல்லியில் பதுங்கியிருந்த போது, அவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். 

அத்துடன், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பெண் பக்தர் சுஷ்மிதாவும் அதிரடியாகக் கைது செய்யதனர்.

அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், அவரது மருமகளும் பாபாவின் பெண் பக்தருமான பாரதி, திவ்யா பாலசுப்பிரமணியம், கனகாம்பிகை ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

 இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா மற்றும் அவருக்கு உதவியதாகப் புகாருக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு எதிராக, பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் விசாரணை நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களைக் காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அத்துடன், சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கில், இது வரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பாலியல் புகார் அளித்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு இருக்கும் நிலையில், இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. 

இதனால், சிவசங்கர் பாபா பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்து, வரும் 19 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டது.

முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்குச் சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டு அங்கு சென்ற போது, அந்த ஆசிரியர்கள், தங்களது வீட்டை பூட்டைவிட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்பட்டது. அதன் பின்னர், சிபிசிஐடி போலீசார் கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஆசிரியைகள் 5 பேரின் வீடுகளில் சம்மனை ஒட்டிய நிலையில், நேற்று முன் தினம் தலைமறைவான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகளில் 5 பேரில், 3 பேர் மட்டும், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அதே போல், சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்படி, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர் மீதான முதல் வழக்கு செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா, நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த 15 நாள் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அதிரடியாக உத்தரவிட்டார். 

இதனால், வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

அந்த நேரத்தில், சிவசங்கர் பாபாவை பார்ப்பதற்காக அவரது பக்தர்கள் இன்று காலை முதல் செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பாக திரண்டு இருந்தனர். நீதிமன்றத்தில்
இருந்து சிவசங்கர் பாபாவை வெளியே அழைத்து வந்த போது, போலீசாருக்கும் சிவசங்கரின் பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதனையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்திய பிறகு போலீசார், சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment