பேய் துரத்துவது போல் கனவுகண்டு ஓடிவந்ததில், தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டேன் என்று மீட்கப்பட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி அயனிவிளை பகுதியில் உள்ள நாகதேவி கோயிலில், கோயிலுக்குச் சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று காலை கோயிலில் சாமிக்கு அர்ச்சனை செய்துகொண்டிருந்தபோது, கோயில் கிணற்றிலிருந்து சத்தம் கேட்டு, அர்ச்சகர் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, கிணற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர் ஒருவர், தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கயிறுகட்டி இளைஞரை மீட்டனர்.
அத்துடன், கிணற்றுக்குள் விழுந்தது பற்றி போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, “பேய் துரத்துவது போல் கனவு கண்டு, ஓடிவந்ததில் தவறுதலாக இந்த கிணற்றில் விழுந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கோயில் கிணற்றில் புதையில் இருப்பதாக ஊருக்குள் பேசப்பட்டு வந்தது. அந்த புதையலை எடுக்கும் முயற்சியில் தான், இந்த இளைஞர் கிணற்றுக்குள் விழுந்திருக்கக்கூடும் என்று ஊர் மக்கள் பேசத் தொடங்கி உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.