சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்த சந்தையடியைச் சேர்ந்த 27 வயதான ஜெப செல்வின், அப்பகுதியில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது பள்ளிச் சிறுவனை, மிரட்டித் தகாத உறவில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. மேலும், இது குறித்து வெளியே சொன்னால், கொன்றுவிடுவேன் என்றும், அந்த இளைஞர், சிறுவனை மிரட்டி உள்ளார்.
பின்னர், வீட்டிற்குத் திரும்பிய சிறுவன், தனக்கு நேர்ந்த அவலத்தை, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெப செல்வின் மீதான குற்றத்தை உறுதி செய்தார்.
இதனைத்தொடர்ந்து, சிறுவனை மிரட்டித் தகாத உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ஜெப செல்வினுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து, அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.