சாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி! குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்க நடவடிக்கை..

சாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி! குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்க நடவடிக்கை.. - Daily news

சிவசங்கர் பாபாவை பிடிக்க சிபிசிஐடி போலீசார், டேராடூன் விரைந்து உள்ள நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கவும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது, குறித்து சமூக வலைத்தளங்களில் அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

 முன்னாள் மாணவிகள் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரிக்கத் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பி வைத்திருந்தனர்.

அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர் பாபா, அவரது வழக்கறிஞர், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆகிய 3 ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், அந்த பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் மட்டுமே கடந்த வாரம் விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் சிவசங்கர் பாபா மட்டும், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அத்துடன், குற்றச்சாட்டுக்கு ஆளான சிவசங்கர் பாபா, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, அவரது தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதாவது, “அவர், உத்ரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாக, மருத்துவ சான்றிதழ்களும் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களும்”, அவரது தரப்பில் இருந்து ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து வந்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர், பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியபோது, மேலும் 3 மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் அளித்தனர்.

ஆக மொத்தமாக சிவசங்கர் பாபா மீது இது வரை 15 புகார்கள் காவல் துறையில் அளிக்கப்பட்டு உள்ளன. அந்தப் புகார்கள் குறித்து, சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் போக்சோ சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

முக்கியமாக, சிவசங்கர் பாபா தற்போது தலைமறைவாகி விட்டதாகவே காவல் துறையினர் கருதும் நிலையில், சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்குகளைத் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி, சிபிசிஐடிக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார், தற்போது டேராடூன் விரைந்து உள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படை போலீசார் டேராடூன் விரைந்து உள்ளனர். 

குறிப்பாக, சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சாமியார் சிவசங்கர் பாபா விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment