வெளிநாட்டில் வேலை இழந்திருக்கும் கேரள மக்களுக்கு, 5,000 ரூ. நிதிஉதவி!

வெளிநாட்டில் வேலை இழந்திருக்கும் கேரள மக்களுக்கு, 5,000 ரூ. நிதிஉதவி! - Daily news

வெளிநாடுகளில் வேலை இழந்தோருக்கு உதவ, அவர்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று (ஆகஸ்ட் 5, 2020) திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

''கேரளாவில் இன்று 1,195 பேருக்குக் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக இன்று 274 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 125 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 66 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். சுகாதாரத் துறையைச் சேர்ந்த 13 பேருக்கு நோய் பரவியுள்ளது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 971 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதில் 79 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது எனத் தெரியவில்லை.

இன்று கேரளாவில் 7 பேர் கொரோனா பாதித்து மரணமடைந்துள்ளனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த 66 வயதான புருஷோத்தமன், 73 வயதான பிரபாகரன், 70 வயதான மரக்கார் குட்டி, கொல்லத்தைச் சேர்ந்த 58 வயதான அப்துல் சலாம், கண்ணூரைச் சேர்ந்த 59 வயதான யசோதா, காசர்கோடைச் சேர்ந்த 76 வயதான அசைனார் ஹாஜி, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 83 வயதான ஜார்ஜ் தேவசி ஆகிய 7 பேர் கொரோனா பாதித்து மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்துக் கேரளாவில் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் திருவனந்தபுரத்திற்கு அடுத்தபடியாக 167 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 128 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 120 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 108 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 86 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 61 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 51 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் , தலா 39 பேர் கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், 41 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 37 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 30 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 14 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 1,234 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,537 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 11,492 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,47,974 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,36,807 பேர் வீடுகளிலும், 11,167 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,444 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 25,096 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை பல்வேறு வகையான 8,84,056 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,444 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இது தவிர சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட சமூக நெருக்கமுள்ள 1,30,614 பேருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,950 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. கேரளாவில் தற்போது 515 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன.

கேரளாவில் கடந்த சில தினங்களாக நோய் பரவும் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாகக் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. இன்றும் திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமானோருக்கு நோய் பரவி உள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்ட 274 பேரில் 248 பேருக்குக் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. பூந்துறை மற்றும் விழிஞ்சம் ஆகிய பகுதிகளில் நோய்ப் பரவல் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் இப்பகுதிகளில் ஆபத்தான நிலை இன்னும் தொடர்கிறது.

நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதால் நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல் துறையையும் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினருக்கு உதவுவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் பணியை அவர்கள் மட்டுமே செய்வார்கள். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை எளிதில் கண்டுபிடிக்க போலீஸாரால்தான் முடியும். எனவேதான் அந்தப் பொறுப்பு போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வேலை இழந்தவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களுக்குத் தலா ரூ.5,000 நிதியுதவி கொடுக்க இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

Leave a Comment