``எதையாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிவார்" - எஸ்.வி.சேகரை கிண்டல் செய்த முதல்வர் பழனிசாமி

``எதையாவது பேசுவார், வழக்கு வந்தால் ஓடி ஒளிவார்

கடந்த சில தினங்களாகவே அரசியல் கட்சிகள் சார்பில் அண்ணா குறித்தும் பெரியார் குறித்தும் நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ”அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்” என்று நேற்றைய தினம் பேசியிருந்தார் எஸ்.வி.சேகர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அமைச்சர் ஜெயக்குமார், ``மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார், அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். உண்மையிலேயே எஸ்.வி.சேகர் மானம், ரோஷம், சூடு உள்ளவராக இருந்தால், அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன். இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் கொடுக்கப் படுகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கும் அவரை பதில் சொல்லச் சொல்லுங்கள்'' எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாக எஸ்.வி.சேகர் தன் பங்குக்கு ஒரு வீடியோ பதிவு போட்டார். அதில்,

``நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் இந்தச் சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படி திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும். 

மக்களின் கருதுக்களை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக நேற்றைய வீடியோவைப் பயன்படுத்திக் கொண்டேனே தவிர, நான் மூன்றாம் தர அரசியல் செய்பவன் அல்ல. அதனால் நீங்கள் தி.மு.க.வைவிட வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும்.

நான் யாருக்குமே விஸ்வாசி கிடையாது. ஒரு தடவை நமது எம்ஜிஆரில் அம்மாவின் உண்மை விஸ்வாசி என போட்டதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொன்னேன். எழுதிக் கொடுக்காத வார்த்தையைப் போடக் கூடாது. அப்படியென்றால் நான் 30 ஆயிரம் பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னேன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நிறைய பேர் அம்மா இருக்கிற வரைக்கும் அம்மா முகத்த நிமிந்துக்கூட பார்த்தது கிடையாது. பாதங்களை மட்டுமே பார்த்து வணங்கி பலன்களை அனுபவித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை.

எம்.எல்.ஏ. சம்பளம், ஓய்வூதியம் நான் திரும்பித் தர மாட்டேன். அது என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். அ.தி.மு.க. கட்சியில் வவுச்சர் போட்டு காசு வாங்கின மாதிரி சொல்றீங்க. தேர்தல் நேரத்தில் எனக்கு கொடுத்த பணத்துக்கு வவுச்சர் போட்டு கொடுத்தவன் நான். நீங்க யாராவது ரெக்கமன்ட் பண்ணி எனக்கு சீட் கிடைச்சதா? பணமே கட்டாமல் எனக்கு எலெக்சன்ல சீட் கொடுத்தது ஜெயலலிதா. 

கொரோனா ஆரம்பத்தில் நீங்கள் செய்ததைத் பார்த்து தேர்தலில் 120 சீட்டுக்கு மேலே வரும் என்றார்கள். இப்ப என்ன கணிப்பு இருக்கிறது என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் வெற்றி தோல்வி மக்கள் கையில் உள்ளது. 100 ஓட்டில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். 10 ஓட்டில் தோற்றவர்களும் இருக்கிறார்கள். 

ஒரு ஆன்மீக அரசியலாக, ஒரு கட்சியாக (பாஜக போல) அ.தி.மு.க. இருந்தால், மாறினால் உங்களுக்கு நல்லது. பாஜக-வோடு கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு நல்லது. இல்ல இல்ல உங்கள சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும். என்ன இருந்தாலும் நீங்கள் என்னுடை அருமை நண்பர் ஜெயக்குமார். டென்ஷன் ஆகாதீங்க" என சொல்லியிருந்தார் அவர்.

தினசரி பத்திரிகையொன்றுக்கு இதுபற்றி எஸ் வி சேகர் அளித்த பிரத்யேக பேட்டியில், ``இன்றைக்கு இருக்கும் அதிமுக அரசில் என்ன நடக்கிறது? அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது. ஆனால், திமுக கொள்கைகள் என்னவோ அதற்குத்தான் அதிமுக அரசு மதிப்பளிக்கிறது. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ரகசியக் கூட்டணி இருக்குமோ என்றுகூட மக்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்கிறது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம்... ‘அ’மட்டும் தானா? என்ற கேள்வி வந்துவிடக்கூடாது இல்லையா... அதனால்தான் அண்ணாதுரை படத்தை எடுத்துவிட்டு மக்களுக்கு இன்னும் நன்கு பரிச்சயமான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போடுங்கள் என்று சொல்கிறேன். இதற்கு எதற்கு இவ்வளவு கோபப்பட வேண்டும்?" என்று கேட்டிருந்தார் எஸ்.வி.சேகர்.

இதைத்தொடர்ந்து, எஸ்.வி.சேகர் - ஜெயக்குமார் இருவரிடையேயான சலசலப்பு, கட்சி சார்ந்த பிரச்னையாக மாறத்தொடங்கியது. 

இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக திண்டுக்கல் சென்றிருந்த முதலமைச்சர் பழனிச்சாமி, அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.வி.சேகருக்கு காட்டமான பதிலொன்றை அளித்துள்ளார். அது, ``எஸ்.வி சேகரின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை, ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார்" என்பது. 

சற்றே கிண்டலாக முதல்வர் இந்த விஷயத்தை சொல்லியிருந்தாலும், மிக அதிரடியான பதிலாகவே இது பார்க்கப்படுகிறது. எஸ்.வி சேகர் குறித்து மேலும் பேசிய முதல்வர், ``எங்களுக்கு இந்தி தெரியும் என எப்படி அவருக்கு தெரியும்? அவர் முதலில் எந்த கட்சி?" என கேள்வி எழுப்பினார். அதேபோல் பாஜகவை விட்டு நாயனார் நாகேந்திரன் அ.தி.மு.கவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் எனவும், இருமொழிக் கொள்கை என்பதே தமிழகத்தில் தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி செய்துள்ளார்.

Leave a Comment