தமிழகத்தில் LKG - UKG மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
By Aruvi | Galatta | 11:20 AM
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் LKG - UKG படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 85 ஆக அதிகரித்து உள்ளது. குறிப்பாக, பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வேகமாகப் பரவி வருவதால், இந்தியாவின் பிற மாநிலங்களில் பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் LKG - UKG படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல், கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளில் LKG முதல், 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முதல் விடுமுறை விடப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.